திங்கள், 15 பிப்ரவரி, 2016

கொடுக்காபுளி


கொடுக்காபுளி
சனிக்கிழமை காலைல.. 
பல் விளக்கும் போதே பல திட்டம்.....! 
அம்மா கிளம்புனதும் அரை நம்பிக்கை..... 
அப்பா கிளம்புனதும் முழு நம்பிக்கை... 
அரைகுறையா சாப்பிட்டு... 
ஆச்சிய ஏமாத்திட்டு..... 
திட்டம் முடிக்க விரசலா கிளம்பியாச்சு.....! 

போன வாரம் கல் எரிஞ்சு தோத்தாச்சு..... 
இந்த வாரம் தொரட்டி கம்பு செஞ்சாச்சு....! 
ஆள் இல்லாத உடஞ்ச வீடு முன்ன.... 
ஆறு ஆள் உயர கொடுக்காபுளி 
ஒன்னு ஒய்யாரமா நிக்கிது.....! 

மூணாம் கிளாஸ் படிக்கிற எனக்கு... 
நாலு தடவைக்கு மேல 
தொரட்டி தூக்க முடியல......! 
அஞ்சாம் தடவையா உன்னி வீசுனதுல..... 
கொத்து பழத்தோட கொப்பு ஒன்னு மாட்டிகிச்சி. 

இழுக்க பலமில்லாம.... 
கை மேல கை வச்சு 
தொரட்டில நான் தொங்க....! 
பிடி வழுக்கி கீழ விழ.... 
கொத்துல ஒத்த பழத்தோட தொரட்டியும் மேல விழுகுது......! 

இடுக்குல மாட்டுன இலைய பிச்சி.. 
பழத்த எடுத்தா... 
தொட்டதும் தோல் உதிர்ந்துச்சி....! 
சிவப்பு சாயம் பூசுன சோவியா... 
எல்லாம் என்ன பாத்து முளிக்குதுக....! 
பறிச்ச இடத்துலே சோவிய தின்னுட்டு.. 
அங்கனே விதைய வீசிட்டு மேல பாத்தா..... 
அடுத்த வார பழம் எல்லாம்..... 
ஒத்த பழம் பறிச்ச என்ன பாத்து... 
நமுட்டு சிரிப்பு சிரிக்குதுக....! 

சாயங்காலம் அம்மா வந்தா.... 
கொடுக்காபுளி பறிச்சயா.......? 
ராத்திரி அப்பா வந்தா..... 
கொடுக்காபுளி பித்தம்ல...! 
கூட சேந்து ஆச்சி.. 
அது பழமா..? சப்புணுல கிடக்கும்...! 
எல்லார்டயும் ஒரே பதில்... 
ஒன்னும் பண்ணல.........! 
சொல்லிடே அடுத்த வாரத்துக்கு பெரிய கம்பு தேட யோசனைக்கு போயாச்சு.... 

15 வருஷம் கழிச்சு.. 
ரெங்கநாதன் தெருவுல....... 
பாக்கெட் கொடுக்காபுளி.. 
10 ரூவாய்க்கு வாங்கி வாயில போட்டா.... 
ஆமா..... 
பழம் சப்புன்னு தான் இருக்கு...........!
                                  ---------------பாரதிசரண் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக