திங்கள், 15 செப்டம்பர், 2025

வாழ்வின் இசை துணுக்கு.

     அது ஒரு மந்தமான ஞாயிற்றுக்கிழமை, என் வீட்டில் யாரும் இல்லை. நேற்று இரவு என் மனைவியுடன் தொலைபேசியில் சண்டையிட்டிருந்தேன். அதனால்  தாமதமாக எழுந்தேன். எழுந்ததும் குளிர்ச்சியை உணர்ந்தேன். ஆம், வெளியே நல்ல  தூறல்.  ஒரு நல்ல சுவையான இந்திய தேநீர் செய்தேன். வெள்ளைப் பாலில் பழுப்பு நிற தண்ணீரைக் கலக்கும்போது, ​​தேநீரின் மாயாஜாலம்


 தொடங்கியது. நான் அதை ரசித்து அருந்திவிட்டு சோபாவில் அமர்ந்திருந்தேன். டிவியில் வீடியோக்களைப் பார்த்துக்கொண்டிருந்தேன். மீனா மற்றும் அர்ஜுனின் படங்கள் என்னை அவர்களுக்குள் சிக்கவைத்து. போஸ்டரைப் பார்க்கும்போதெல்லாம் இதயம் எப்போதும் இந்த படத்தைப் பார்க்கத் தூண்டும். 

          ஒரு காலம் இருந்தது, இயக்குநர்களால் உருவாக்கப்பட்ட வாழ்க்கை வெள்ளித்திரையில். அது அவற்றில் ஒன்று. நான் நாஞ்சில் நாடனின் வார்த்தைகளால் மும்பை சாலைகளில் சுற்றித் திரிந்திருக்கிறேன். ஆனால் இப்போது, ​மும்பை மாநகரம் பி.எஸ். வினோத்தின் கண்களால், ஏ.ஆர். ரஹ்மானின் ஒலிகளால், வசந்தின் கற்பனையால், கார்த்திக் மற்றும் சித்ராவின் வாழ்க்கையாக திரையில் மலர்ந்தது. ஆம், இந்தப் படம் ஒரு பூவைப் போன்றது. ஒரு வாடாத மற்றும் என்றென்றும் மணம் கொண்ட மலர்.  நான் தொலைகாட்சி திரைக்கு அருகில் செல்லும்போது அதன் வாசனையை உணர முடியும் என்று நினைத்தேன். 

         இது ஒரு ஜோடியின் எளிய கதை. அவர்கள் தங்கள் அன்புக்குரியவர்களின் மரணத்தின் சாட்சிகள். கடந்த காலத்தில் அவர்களுக்குள் மிகவும் ஆழமான உறவு இருந்தது. ஆனால் இப்போது அவர்கள் நகர்ந்து வழக்கமான வாழ்வில் இருக்கிறார்கள். ஆனால் ஒரு நாளில் தங்கள் காதல் நினைவுகளை நினைவுகூர ஒரு சிறிய நேரம் போதும். அவர்களுக்கு எதை பற்றியும் எந்த புகாரும் இல்லை. அவர்கள் தங்கள் பொறுப்புகளுக்காக இவ்வாழ்க்கையை நடத்துகிறார்கள். ஆனால் இந்த உலகம் மற்றும் இயற்கைக்குத் தெரியும், உங்கள் வாழ்நாள் முழுவதும் யாரும் செய்யாத தவறுக்காக நீங்கள் சோகமாக இருக்க முடியாது என்று. 

      அது அவர்களை ஒருவரையொருவர் பார்க்க வைக்கிறது, இரு தரப்பினரின் கதவுகளையும் அன்பால் தட்டுகிறது. உண்மையில் அவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் தங்கள் கதவுகளை எப்போது திறக்கிறார்கள் என்பதை நம்மால் சரியாகச் சொல்ல முடியாது. அதனால்தான் இந்தப் படம் கிளாசிக். உலகின் மிகப்பெரிய தேடல் பூமியில் வாழ்க்கை என்ன என்பதுதான். ஒன்றாக இருப்பது மட்டுமே என்பதை இயற்கை  நமக்குச் சொல்லும் ஒரே பிரபஞ்ச ரகசியம். ஆம், நான் என் மனைவிக்கு ஒரு அழகான ரோஜாவை செய்தி மூலம் அனுப்பினேன்.

வெள்ளி, 19 ஜூன், 2020

நிலை பெறுதல்



நீல விசும்பில் நீந்தி செல்கிறது பருந்து 
அந்தரத்தில் அலைதலில் நிலை கொள்கிறது 
வாழ்வு எல்லாம் வெளியோடு மட்டும் உரசி கொண்டிருக்கிறது 
எடையற்று இருத்தலின் இயல்பை ஏற்றிருக்கிறது.
ஆகாயம் முழுதும் ஆள்கிறது 
இறை என உயரத்தில் இருந்து 
இயங்கும் உலகை தாழ்த்தி பார்க்கிறது
ஒரு நாளின் ஒரு பொழுதேனும் 
மண் மேல் கால் பதித்து பறவையாய் ஆகி விடுகிறது.

                      ---------------------------பாரதி சரண்

வியாழன், 14 மே, 2020

உய்வுற்றிருத்தல்


 
    
                                                                                           


ஓரங்களில் மரங்கள் மட்டும் ஓங்கி நிற்க்க 
நிராதவராய் கிடக்கிறது கரும் சாலை 
மைனாவின் விழிப்பும் , நாய்களின் குறைப்பும் , காகங்களின் கரையலுமாய் 
ஓவென்று காதை அறைகிறது முற்பகல் காற்று .
வண்டியிலிருந்து தவறி விழுந்த தர்பூசணி ஒன்று 
சிதையாமல் நடு ரோட்டில் உருண்டு நிற்கிறது.
கழுத்து மணி ஒலிக்க ஒயிலாக நடை வைத்து செல்கிறது 
இளங் காளை 
தூரத்தில் ஒரு பாட்டையா மினுக்கும் கருதேகத்தில் 
வெள்ளாடையில் முன்னேறிவர 
கடக்கும் ஒரு நொடியில் 
என் மகனும் அவரும் வாயோடு கட்டி வைத்த முகக்கவசம் அவிழ்க்காமல் 
தாடை இழுபட ஒரு புன்னகை பரிமாறி கொள்கிறார்கள்.
நிர்வாணம் மறைக்க இலையாடை கண்டடைந்த அந்த தொல் மனிதனை 
நினை கொள்கிறேன்.
                                                                                  
                                                                                     --------------------பாரதிசரண் 

வியாழன், 28 பிப்ரவரி, 2019

சந்தித்துக்கொள்ளுதல்

2 ஆம் நடைமேடை
வந்துசேரும் மின்தொடர்வண்டியில் இருந்து தான் நேற்று இறங்கினேன்.
இன்று எற போகும் அதே வண்டியில்
நேற்று என்னுடன் இறங்கிய முகத்தை
தேடுகிறேன்.
எத்தனையோ முகங்கள் கடந்து போகும்
ரயில் பயணத்தில்
அறிமுகம் இல்லாத ஒருவரை
மீண்டும் சந்திப்பது போல தான்
வாழ்க்கை .
தற்செயலாக ஒரு புன்னகை உதிர்க்க
மொத்த வாழ்வின் ஓட்டத்தில்
சிற்சில கணங்களை கொண்டிருக்கிறது.


சனி, 1 டிசம்பர், 2018

மந்திரம் கவிதைகள்

21ஆம் நூற்றாண்டின் சந்தர்ப்பவாதி
நான் ஒரு நாடோடி
என்னிடம் ஒரு மடிக்கணினி உண்டு.
இரண்டு தொடுதிரை கைபேசிகள்
ஒன்று அலுவலுக்கு.
மற்றது அந்தரங்கத்திற்கு.
8மணி நேரம் தண்டுவடம் மடித்து
பணம் பண்ணுகிறேன்
மீதி நேரங்களில் பயணம், உறக்கம், கலவி
ஆம் திருமணமாணவன் -கரணம்
நான் ஒரு 90களின் சிறுவன்.
ஒரு கையால் பம்பரம் விட்டுக்கொண்டே
இன்னொரு கையால் தற்படம் எடுத்து
நிலை தெரிவிக்கும் விநோதன்.
வாய்ப்புகளை நோக்கி ஓடும் பகடையாளன்
எப்போதும் விருத்தங்கள் வேண்டி
வாழ்வை உருட்டி கொண்டிருப்பவன்.
எங்கும் வேர் விடாமல் பார்த்துக்கொள்ளும்
ஒரு மணிபிளாண்ட் மனிதன்.
எனது இளமை நினைவுக்குள் ஒரு ஊர் சுமப்பவன்
என் மகனின் நினைவுகளோ
ஒரு அடுக்ககத்தின் பல நகரங்களை ஏற்றிருக்கும்.
சந்தர்ப்பவாதத்தின் தத்துவம் கொண்ட என் வாழ்வில்
என் அப்பா ஒரு வாகை மரத்தின் செம்பூக்களோடும்,
நான் ஒரு வேப்ப மரத்தின் மஞ்சள் பூக்களோடும்,
என் பிள்ளையோ வண்ணம் குழைந்த குரோட்டன்ஸ் இலையோடும்
பால்யத்தை பகிர்ந்து கொண்டிருப்போம்.
oOo
கீழ்மையின் ஒளி
அகாலமாய் நீள்கிறது நாட்கள்.
நான்கு சுவர் ஒரு கூரை
கைபேசி திரைஒளியில் ஒளிர்கிறது இருளறை.
பெருவிரலின் அசைவுகளில்
தொடுதிரையில்
நுற்றுக்கணக்கானவர்களின் காலம்
உயிர் பெறுகிறது.
காலக்கோடு ஒரு தற்பெருமை அட்டவணை.
முகப்புத்தகத்தின்
இடுகைகளில்
மின்னும் விருப்பக்குறிகளில்
பொறாமையின்
இயலாமையின்
நுண்ணிய ரேகை பதிந்திருக்கிறது
கீச்சுகளின் கருத்துலகில்
உரையாடும் மறுமொழிகளில்
வக்கிரத்தின்
விரசத்தின்
ஆழ்மன முகமூடி
கள்ள புன்னகை பொதிந்திருக்கிறது.
தேடுபொறியின்
வலை வரலாற்றில்
அந்தரங்கங்களின் ரகசியங்கள்
வால் தீண்டும் நாகமென
தீரா காமத்தின் பின்னிரவுகளை
முடிவற்று சூழ்ந்திருக்கிறது.
அணையா இருண்மையின்
கீழ்உணர்ச்சிகள்
கரும் இரவின் போர்வையாக
எல்லா அறைகளிலும்
திரையிட்டிருக்கிறது.
ஆதி மிருகத்தின் உயிர்விசையை
அத்திரையொளி
தனித்த சுடர் போல்
நகரின் எல்லா மனிதருக்குள்ளும்
ஒளிர செய்து கொண்டிருக்கிறது
                                                              ---------------------மந்திரம்

செவ்வாய், 23 அக்டோபர், 2018

பேய் உலகம்

இருட்டு அறைகளில்
கவிந்து கிடக்கிறது அச்சம்.
அநாதரவான தனிமையில்
உயிர்பெறுகிறது
அமானுஷ்யம்.
சிறு ஒலிதுணுக்கில்
பேரமைதி அதிர்கிறது.
நினைவின் அடுக்கில்
பேய்கதைகள்
மேலுழுகிறது.
உள்ளறைகளில்
என்னை தவிர
இன்னொன்று நிறைகிறது.
இப்போது திரும்பி
பார்க்க முடிவதில்லை.
பின்புறம் குளிர்ச்சி பரவுகிறது.
தோள்களில் வியர்வை
துளிர்க்கிறது.
சட்டென வெளிச்சம் மீள்கிறது.
இனி இருளுக்கென ஒரு
உலகம் இவ்வீட்டில்
பிறந்துவிட்டது.

                 --------------------------------பாரதிசரண் 

வெள்ளி, 12 அக்டோபர், 2018

ஆடியுலகு









ஒரு பூதக்கண்ணாடி கிடைக்கும்
பொழுது
சுருங்கிவிடுகிறது உலகம்.
நுண்ணியவைகளை
கூர்ந்து நோக்கி
ஆடியின் வழி
உருப்பெருக்கு அடைகிறது
அளவுகளின் புறஉலகு.
ஈயின் இறகுகளில்
காக  உடல்நிறைகிறது.
தாத்தா செடியின் கொண்டையில்
சூரியகாந்தி இதழ் விரிகிறது
கச்சிதமான கற்பனைகள்
மாயத்தோற்றத்தில்
பருப்பெறுகிறது.
மாயஉருவங்களாய் நாமும்
யாரோ ஒருவரின்
பூதக்கண்ணாடியின் பின்புறத்தில்.

                                 
                                                         -------------பாரதிசரண்