திங்கள், 15 பிப்ரவரி, 2016

மாற்றம்


 மழை சற்று ஓய்ந்திருந்தது.இரவு முழுவதும் சொற்பொழிவாற்றிவிட்டு காலியான திடல் போல இருந்தது வானம். சூரியன் குளிருக்கு பயந்து மேக அடுக்குகளுக்குள் போய் பதுங்கி இருந்தான்.மை தீட்டியிருந்தது மேகத்துக்கு.  வாகனங்கள் அற்ற பொதுவியல் துறை முகப்பு  மிக அழகாய் இருந்தது. மஞ்சள் பூ மரங்களின் பூக்கள் நீரோடு கலந்து ,மண் மீது இணைந்து அந்த பரப்பிற்கு ஒரு புதிய நிறத்தை தந்து கொண்டிருந்தன. நான் தனியாக அந்த கான்க்ரிட் மேஜை மேல் அமர்ந்திருந்தேன்.எனக்குள் மழை ஓவென்று பெய்து கொண்டிருந்தது. சிந்தனை துளிகளால் என் மனக்குளம்  நிரம்பி வழிந்து கொண்டிருந்தது.

"இந்த இடத்திற்கு தான் இது வந்து சேருமா…?  வேற வழியே இல்லயா..?" எனக்குள் நானே கேள்வி கேட்டு கொண்டிருந்தேன்.

"என்னை விட என் நண்பர்களுக்கு தெரிந்திரிக்கிறது அவனை பற்றி . ஆண் , பெண்  உறவில் நட்பு வெறும் துவக்கம் மட்டும் தானா..?   தோழி என்பவள் காதலியாக்கப்படுவாள் என்பது தான் இங்கு நிஜமா ? " கேள்விகள் ஒரு குளிர்ந்த காற்றாகி என் தேகத்தினுள் ஊசி போல் இறங்கி கொண்டிருந்தது.
10 மாதம் முன்பு வரை ஒரே வகுப்பை பகிர்ந்து கொண்டதை தவிர எந்த அறிமுகமும் இருந்திருக்க வாய்ப்பில்லை எனக்கு அவனுடன்.

ஆனால் இன்று , "சுபா, உண்ட ஒரு விஷயம் சொல்லணும். ரொம்ப  நாளா தோணிகிட்டே இருந்துச்சி. சரியா? தப்பா? ன்னு தெரியல , ஆனா சொல்லாம மட்டும் இருக்க கூடாதுன்னு முடிவு பண்ணிடேன். அதனால நாளைக்கு காலைல 9.30 க்கு டிபார்ட்மேன்ட்  என்ட்ரன்ஸ்க்கு வந்துடு. நீ மட்டும் தனியா." நேற்று இரவு கைப்பேசியில் இந்த வார்த்தைகளை கேட்டதிலிருந்து என்னால் இயல்பாக இருக்க முடியவில்லை.

இந்த 10 மாத நாட்களை வெறும் 12 மணி நேர இடைவெளியில் எத்தனை முறை கடந்து  போயிருப்பேன் என்று எனக்கே தெரியவில்லை. முடிவில், இப்போது எதையும் நினையாமலே மனம் அந்த நாட்களில் நின்று போயிருந்தது.

 பத்து மாதங்களுக்கு முன்பு, இரண்டாம் வருட, முதல் பருவ விடுமுறை நாளில், 10 ஏக்கருக்கும் மேல் உள்ள ஒரு தொகுப்பு வீட்டு கட்டுமான இடத்திற்க்கு தொழிற் பயிற்சி வேண்டி என்னையும் அபிமன்யுவைும் சேர்த்து பத்து பேர் சென்றிருந்தோம். எல்லோருமே எங்கள் வகுப்பு மாணவர்கள்.கட்டி முடிக்கப்படாத வீடுகளின் ஊடே,கட்டுப்பாடற்ற ஒரு பரந்த வெளியில், யார் கண்களும் எங்களை நோக்காத புதிய இடத்தில், சுதந்திரமான எங்கள் பத்து பேரின் பேச்சும்,சிரிப்பும்  எழுப்பப்பட்ட செங்கல்களின் மேல் பட்டு அவ்விடம் முழுவதும் எதிரொலித்து கொண்டிருந்தது.

பத்தாம் நாள் பயிற்சி முடிவின் இறுதி நாளில்,ஒருவர் பின் ஒருவராக எங்களுக்கு பிடித்த பாடலை பாடிகாட்டிக் கொண்டிருந்தோம். கடைசியாக அபி இந்த வரிகளை பாடினான்
  "வேர் இல்லாத மரம் போல் என்னை
நீ பூமியில்  நட்டாயே
ஊர் கண் எந்தன் மேலே பட்டால்
உன் உயிர் நோக துடித்தாயே
உலகத்திண் பந்தங்கள் எல்லாம்
நீ சொல்லி தந்தாயே
பிறப்புக்கும் இறப்புக்கும் இடையில் வழி நடத்தி சென்றாயே".
கைதட்டல்களுக்குள்  சூழப்பட்டிருந்த  அபியை என் வார்த்தைகளால் உடைத்து நெருங்கினேன்.

"அம்மா மேல அவ்ளோ பாசமா..?"  என்றேன். இந்த கேள்வியை எதிர்பார்த்திருந்தான்.

"நாம எத நினச்சு ஏங்குறமோ, அது மேல தான் பாசம் அதிகமா இருக்கும்" என்றான். அபியின் இதழ் ஓரம் புன்னகை வெறுமையாய் இருந்தது.

"அப்டின்னா.."-என்னால் அதற்க்கு மேல் கேட்க முடியவில்லை.

"ஆமா எங்க வீட்ல நான்,ரெண்டு அண்ணன்,அப்பா அவ்ளோதான். அம்மா நான் பிறக்கும் போதே..." அபியால் அதற்க்கு மேல் பேச முடியவில்லை வார்த்தைகள் தொண்டைக்குள் சிறைப்பட்டிருந்தன.

எல்லோரும் அனுதாபங்களை அவன் மேல் நிறைத்து கொண்டிருந்தார்கள். என்னை தவிர.
நான் மட்டும் தான் " பாட்டுல ரொம்ப உயிர் இருந்துச்சி. உன்  மனசோட  ஆழத்துல இருந்து உன் குரல் கேட்டுச்சி" வாழ்த்துக்களோடு அபியை அணுகினேன்.

"அன்று  வருந்திய யாரும் அவனோடு நட்பாகவில்லை,வாழ்த்திய என்னை தவிர. நாட்கள் நகர்ந்து இன்று இந்த இடத்திற்க்கு என்னை வர செய்தது என் வாழ்த்துகளா அபி...?" யோசித்து கொண்டிருக்கும் போதே அபி வந்து சேர்ந்திருந்தான்.

இப்படி ஒரு மகிழ்ச்சியை சிரிப்பை அபியின் முகத்தில் நான் இது வரை பார்த்ததில்லை. சோகப்படத் தெரியாத சிறு குழந்தையாய் இருந்தான் அவன்.
"என்ன சுபா பயங்கரமான யோசனையா? ஹே ஸாரி பா. வர்ற வழியில பைக் சகதியில மாட்டிக்கிச்சி, அதான் கொஞ்சம் லேட் ஆயிடுச்சு. ஸாரி,ஸாரி. " அவன் வார்த்தைகள் கூட மழலையாய் இருந்தது.

  இந்த சந்தோஷத்தை ஒரு நொடியில் கலைத்து விட முடியும்.ஆனால் என்னால் முடியவில்லை.இது வரை பார்த்த அபியின் நாட்களில் இன்று தான் ஆக பெரிய மகிழ்ச்சி  நிறைந்திருந்தது.

"சுபா, நான் உண்ட ஒண்ணு சொல்லணும்ன்னு சொன்னேன்ல அது வந்து…."
"அபி ,ஒரு நிமிஷம் . சொல்றதுக்கு முன்னாடி எனக்கு கொஞ்சம் விஷயம் நீ தெளிவாக்கணும். அப்றம் நீ சொல்ல வந்தத நான் கேக்குறேன்.."அவனை முடிக்க விடாமல் நான் துவங்கி இருந்தேன்.

"சொல்லு சுபா." அபி அதே மனநிலையில் தான் இருந்தான். புன்னகை சற்று அதிகமாயிருந்தது.
"நம்ம டிரேய்னிங் போய்ருந்தப்ப நீ உன் அம்மா பத்தி சொன்ன, எல்லாரும் உனக்கு ஆறுதல் சொன்னாங்க. பட் நான் எதும் சொல்லல .ஸ்டில் நௌ. அப்றம் எப்டி என்ட்ட பேச ஆரம்பிச்ச..?"எங்கிருந்து என்னை நகர்த்தினானோ அந்த புள்ளிக்கே அவனை அழைத்து வந்தேன்.

"இவ்ளோ தானா..! வெரி சீம்ப்ல். அவங்க எனக்காக உதிர்த்தது வெறும் வார்த்தைகள் மட்டும் தான். எனக்குள்ள இருக்குற வலிக்கான ஆறுதல் வெறும் வார்த்தைகள்ள இல்ல. எனக்குள்ள வலி அவங்களால கேட்கப்பட்டிருக்கலாம்,ஆனா உன்னால மட்டும் தான் உணரப்பட்டது. மொழிய விட மௌனம் ஆழமானது சுபா." அபி அகத்தின் உள்ளிருந்து பேசினான்.

"அப்ப நான் உன்ட்ட பேச ஆரம்பிச்சிடுவேன்ணு உனக்கு நம்பிக்கை இருந்துச்சா..? “  என் குரலில் ஆர்வம் அதிகமாயிருந்தது.
"உன்ன தவிர யாரும் பேச மாட்டங்கன்ணு அதிகமா நம்பிக்கை இருந்துச்சி.."  என்றான்.என் ஆர்வத்தை இன்னும் அதிகப்படுத்தினான்.
"அந்த நொடி நீ என்ன நினச்ச அபி"
"ஏதோ ஒரு உறவு வேராகி மண்ண இறுக பிடிக்கிற மாதிரி தோனுச்சி. அந்த வேர் ஒரு நாள் மரமாகும்ன்னு நம்புனேன்" என்று கூறினான்.அபியின் வார்த்தைகளில் ஏதோ ஒரு உணர்வு கலந்திருந்தது.

  என்னால் அதற்கு மேல் நகர முடியவில்லை. அந்த  புள்ளியிலிருந்து விலகி வேறு திசை நோக்கி என்னை நகர்த்தினேன்.

"சரி ஓகே. ஏன் நான் சொல்றத உடனே கேக்க ஆரம்பிச்ச அபி."
"இன்டர்வியூ நெறய இருக்கும் போல,நான் உக்காந்துகிறேன்" சொல்லி விட்டு அருகில் அமர்ந்தான்.
"இப்ப சொல்றேன். நீ எதுன்னு ஸ்பெஸிஃபிக்ஆ சொல்ற சுபா.."
"ம்ம். நான் உன்ட்ட ஃபர்ஸ்ட் டைம் படத்துக்கு அதிகமா போகாதண்னு சொன்னதிலிருந்து" கேட்டுவிட்டு என் கண்கள் அவன் பதிலுக்காக எதிர் நோக்கி இருந்தது.

'இதுக்கு பதில் சொல்றதுக்கு முன்னாடி ஒண்ணு சொல்லிடுறேன். உலகத்துல ஆண்கள் ஆண்கள்ட்ட அதிகமா அறிவுரை கேக்கறத்தும் இல்ல , சொல்றதும் இல்ல. அப்டி நடந்துச்சுனா அது கால விரயமா தான் இருக்கும், அதிகபட்சமா அப்பா மகன தவிர. என் விஷயத்துல அது கூட நடந்தது இல்ல அப்ப வரைக்கும். நானும் அப்பாவும் ஓடுற நதி பிளவோட ரெண்டு கரைலையும் நின்னுட்டு இருந்தோம் ரெண்டு பேருக்கும் இடையில இறங்கி நடந்து வர முடியாத ஆழம், நீந்தி கடந்து வர முடியாத தூரம். அதனால அவர் எனக்கு அறிவுரைன்னு எதும் சொன்னதில்ல." சொல்லிவிட்டு சிறிது நேரம் மௌனமாயிருந்தான்.

  "இப்ப நீ என்ன சொல்ல நினைக்கிற.." என்று கேட்டேன்.என்னால் அவன் சொற்களில் இருந்து என் கேள்விக்கான விடையை பிடிக்க முடியவில்லை.
"பெண் மட்டும் தான் ஆண் என்பவன வழி நடத்துறா. யாராலயும் ஏத்துக்க முடியாட்டினாலும், அதான் உண்மை. பெண், தான் வாழ்க்கையை மொத்தமா ஆண்ட்ட ஒப்படச்சிட்டாலும் ,அவளுக்குள்ள ஒரு பயம் .இவன் நம்மள பத்திரமா பாத்துப்பானான்னு..! அதனால பெண் அவனுக்குள்ள புகுந்து அவன கொண்டு போறா .ஒரு படகோட்டியா. ஆண் என்கிற தோணிய இந்த வாழ்க்கை நதில லாவகமா ஒட்டுறா. தாய் தொடங்கி மகள் வரைக்கும் இதே நிலமை தான்." என்றான்.என் கேள்வியிலிருந்து விலக்கி அவன் பதிலுக்குள் என்னை இழுத்தான்.

"அப்ப பெண் சொன்னா மட்டும் தான் ஆண் கேட்பான்னு சொல்றியா..." என்று கேட்டேன்
"இல்ல பெண்ணால மட்டும் தான் ஆண் கேட்கிற மாதிரி சொல்ல முடியும். இயற்கை அந்த திறமய பெண்கிட்ட தான் மறச்சி வச்சிருக்கு.." என்று சொன்னான்.
என் எல்லா கேள்விக்கும் அபி பதில் வைத்திருந்தான்.
"ஓகே. பட் ஸ்டில் என் கேள்விக்கு நீ இன்னும் பதில் சொல்லல அபி"

"சொல்றேன். நான் மாசத்துக்கு 10 படம் போறவான். சோ தட்,ஒரு நாள் என் ப்ரெண்டு ஒருத்தன படத்துக்கு கூப்ட்டேன். அவன் " ஸாரி மாம்ஸ் இன்னைக்கு வேண்டாம் டா. லாஸ்ட் வீக் படத்துக்கு  போனததுக்கே வீட்ல தான் காசு வாங்கினேன். இப்பவும் கைல காசு இல்ல மறுபடியும் படத்துக்குன்னு கேட்டா அம்மா திட்டுவாங்க டா. சோ, நெக்ஸ்ட் வீக் போலாம்" ன்னு சொன்னான். இப்டி சொன்னவனோட  தான் ஒரு வீக் ல 4 படம் பாத்து இருக்கேன் அவன் கூப்பிடான்னு." என்று கூறினான்

"இதுக்கும் என் கேள்விக்கும் என்ன சம்மந்தம்..?" என்று கேட்டேன்.மொத்தமாக குழம்பி போய்ருந்தேன் நான்.

"வெய்ட். இப்ப என் பிரச்சின என்னன்னா, அவன் என்னோட படத்துக்கு வரலன்னு சொன்னதுல இல்ல. அவன் கூப்பிடும் போது என்னய போகாதன்னு சொல்ல யாரும் இல்லன்னு தான். அன்னைக்கு தான், நீ என்ட்ட “க்லாஸ் கட் பண்ணிட்டு படத்துக்கு போனா உனக்கு தான் நஷ்டம்”ன்னு எல்லாம் சொல்லிட்டு இருந்த.உண்மைய சொல்லணும்னா,  நீ அன்னைக்கு அட்வைஸ் பண்ணாம,” தேவைல்லாம படத்துக்கு போகாத”ன்னு சொல்லிருந்தாலே நான் கேட்டிருந்திருப்பேன். அப்ப அந்த நொடி எனக்கு தேவபட்டது என்ன உற்று நோக்குற ஒரு உயிர்,என் மேல அக்கறை காட்ற வார்த்தைகள். அத அன்னைக்கு நீ தந்த சுபா"அபி கண்கள் விரிய பேசி முடித்ததிருந்தான்

மேட்டில் இருந்து வழியும் மழை நீர் போல் வந்தன அவனிடமிருந்து பதில். இலைகளிலிருந்து சொட்டும் நீரை பார்த்து கொண்டே,அவனை என் பாதைக்கு எப்படி மீண்டும் இழுத்து வரலாம் என்று சிந்தித்திருந்தேன்.

"சுபா.." என்று அவன் விளித்த நொடியில் விழித்து கொண்டேன்.
"சரி. ஓகே. அந்த நொடி உனக்கு வார்த்தைகள் தேவைப்பட்டது. அது என்னோடதா இருந்துச்சி. ஐ அண்டர்ஸ்டண்ட். பட் என் ப்ரண்ட் சொல்றாங்க, நீ, நான் சொன்னா மறுப்பே சொல்லாம எல்லாத்தையும் உடனே கேக்குறன்னு. எனக்கு அது பிடிச்சிருக்கு தான். ஆனால் எப்படி உன்னால இப்படி இருக்க முடியுது." என்று கேட்டேன் .என் கேள்வியால் அடுத்த பாதை அமைத்திருந்தேன்.

"இது தப்புன்னு நினைக்கிறியா சுபா..?. என்று கேட்டான்.

"தப்பு இல்ல. ஆனா ஏதோ இயல்பா இல்ல. இப்போ ,நதில மிதக்குற தடி நீரோட வேகத்த,சுழற்சிய,தடைய தாண்டி அந்த ஓட்டத்த எதிர்த்து,சுழன்று,நீந்தி அப்றம் ஏதோ ஒரு புள்ளில அந்த ஒட்டத்தில இருந்து விலகி கர ஒதுங்கும்.அப்றம் திரும்பவும் கொஞ்ச நாள் கழிச்சி நதியோட இழுப்புல போய் சேந்துரும்.  ஆணும் அப்டித்தான் எப்போதும் பெண் சொல்ற வார்த்தைகளுக்கு உடனே செயல்வினையாற்றது  இல்ல. நிறைய மறுப்புகள், தர்க்கங்கள்,நியாயபடுத்துதல் எல்லாம் நிகழ்ந்த பிறகு தான் பெண்ணோட வார்த்தைகள கவனிக்கிறான். ஆனால் நீ அப்படி இல்ல. ஏதோ தனிச்சி இருக்க. அதான். ரெண்டு இயல்பையும் என்னால புரிஞ்சிக்க முடியல அபி." என்றேன். ஆட்டும் கால்களின் வழியே என் மனதின் வேகத்தை பூமிக்கு கடத்தி கொண்டிருந்தேன்.

  "ஆமா சுபா உனக்கு இது ஆச்சரியமா இருந்திருக்கும்ண்ணு என் ப்ரண்ட்ஸ் என்ட்ட கேக்குற வரைக்கும் எனக்கு  தெரியல. அவங்க என்ட்ட," ஏன்டா நீ சுபா சொல்ற வார்த்தைக்கு உடனே ரெஸ்பான்ஸ் பண்ற. கெத்தா இரு டா."  இப்டி சொல்லும் போது அதிர்ச்சியா தான் இருந்துச்சி. அப்றம் யோசிச்சு பாக்கும் போது தான் தெரிஞ்சுச்சி,ஒரு பொண்ணோட வார்த்தைகள உடனே மதிக்கிறது இங்க ஆணின் இயலாமை மாதிரி பார்க்கப்படுது. இறுதியா அவளோட முடிவுகள் நோக்கி தான் வர போறோம்ன்னு தெரிஞ்சாலும் ஆண் மனசால அத உடனே ஏத்துக்க முடியல. அவளோட வார்த்தைகளுக்கு எதிர் வினையாற்றது மூலமா தான், ஆண் தான் இருப்பை உயர்த்தி காட்ட முயற்சிக்கிறான்.” என்று கூறினான்.அபி தன் பதில்களால் என் கேள்விகளை முழுமை ஆக்கி கொண்டிருந்தான்.

" அப்ப இது ஆணால தெரிஞ்சே போடப்படுற நாடகமா..?." என்று கேட்டேன்

"இது  நாடகம் இல்ல,ஆண் அவனுக்கு பெண் மூலமா நடத்திகிற  சுய தேர்வுன்னு வேணா சொல்லலாம்.." அபி நிதானித்து கூறினான்.

"இந்த தேர்வுல இருந்து என்ன தெரிஞ்சிக்கிறான்.. ?" விடாமல் கேட்டேன் .ஆணின் இயல்பை ஆண் சொல்லி கேட்க காத்திருந்தேன்.

"அவ இவன் மேல வச்சிருக்குற அன்போட அளவு. எப்டீன்னா, விவரம் தெரியிற வர  அம்மா சொல்றத கேட்டு வளர்ற ஆண் குழந்தை. விவரம் தெரிய ஆரம்பிக்கும் போது அப்பா, அம்மாவின் வார்த்தைகளுக்கு எதிர் வினையாற்றுகிறார்ன்னு பாக்குறான்.பின், அம்மா உடைந்து  அழும் போது அம்மாவின் வார்த்தைகளின் படியே அப்பா செயல்படுவதைுயும் கவனிக்கிறான். அவனும் இந்த இரு செயல் வழியாகவே அம்மாவை அணுக தொடங்குகிறான். ஒவ்வொரு முறையும் அம்மாகிட்ட இருந்து , கடைசியா அவ வார்த்தைகளுக்கு வினையாற்றும் போது கிடைக்கிற  அதீத அன்பும், பாசமும் மீண்டும் மீண்டும் அந்த செயலையே அவன செய்ய தூண்டுது. அம்மாவிடம் தொடங்கிய அதையே அவன் உறவு நிலையில் . எல்லா பொண்ணுங்க கிட்டயும் காட்டுறான்." என்று பதிலுரைத்தான். அபி தீர்வுகளால் நிறைந்திருந்தான்.

"அப்றம் எப்டி நீ ஒரு சராசரி ஆணா என்கிட்ட நடந்துக்கல..?, என் வார்த்தைகளுக்கு உடனே வினையாற்றது மூலமா என்ன ஈர்க்கலாம்ன்ணு பாத்தியா...?" என்றேன்.என் கேள்வி கொண்டு என் பாதையை நீட்ட செய்தேன்.

"ச்சே...நானும் ஒரு வேள  சராசரியா இருந்திருப்பேன். நான் பிறந்ததிலிருந்து அம்மா என் கூட இருந்திருந்தா...!"  அமைதியாக கூறினான். தன் பதிலை கல்லாக்கி என் பாதை முழுதும் அடைக்க செய்திருந்தான்.

அவன் சட்டை பையில் கைபேசி அதிர்ந்தது. எடுத்து பேசி விட்டு,"சுபா ஹெச். ஓ. டீ கூப்புடுராறு, டென் மிநிட்ஸ் வெய்ட் பண்ணு பா . நான் உடனே வந்துடுறேன் ." என்னை தனிமைபடுத்திவிட்டு சென்றிருந்தான்.

எனக்கு இப்போது இந்த தனிமை  அவசியமாயிருந்தது.

  நான் நினைத்த புள்ளியை நோக்கி தான், அபி என்னை நகர்த்தி கொண்டிருந்தது போல் இருந்தது. அவன் அணுகுமுறை ஆழமானதாக இருந்தது. தீர்க்கமான காரணங்களின் வடிவமாக என் முன் அமர்ந்திருக்கிறான். ஆனாலும் அந்த இரண்டு நிகழ்வுகளையும் என்ன சொல்லி பூர்த்தி செய்வான் என்று சிந்தித்து கொண்டிருந்தேன்.

என்னால் உட்கார முடியவில்லை. எழுந்து விட்டேன். கைகளுக்கு  எதையோ பற்ற வேண்டும் போல் இருந்தது.அருகில் உள்ள மரத்தை பிடித்து கொண்டேன்.
மரப்பட்டைகளின் வழியே மழை நீர் கசிந்து கொண்டிருந்தது. கசிந்த நீரை விரல்களின் வழியே வாங்கி கொண்டிருந்தேன். ஒரு குளிர்ந்த நீராய் அந்த நினைவுகள் என் விரல்களில் நகர்ந்து  கொண்டிருந்தது

மூன்று மாதத்திற்க்கு முன்னால், நான்கு நாள் தொழில்நுட்ப சுற்றுலாவிற்காக பெங்களூர் சென்றிருந்தோம்.கடைசி நாள் இறுதியில் கிருஷ்னராஜ சாகர் அணை. அணைகள் ஒரு பிரம்மாண்ட அமைதி. ஓங்கி உயர்ந்த மலை முகடுகளுக்கு நடுவே கொட்டப்பட்டிருக்கும் நீரை ,தன்னகத்தே ஒளித்து கொண்டிருக்கும் பெரும் சுவர்,அதன் வழியே வெளி வரும் நீரில் தெரியும் வேகத்தை விட, அமைதியாய் உறங்கும்  உள் நீரில் உள்ளது நீரின் உச்சம். அன்று, அஸ்தமானமாகும் ஆதவனிலிருந்து மஞ்சள் வாங்கி அந்தி உதித்து கொண்டிருந்தது. பிருந்தாவனில் நானும் ,அபியும்  தெரிந்த கண்களிலிருந்து மறைந்து ,கூட்டத்தினுள் தொலைந்து போய் இருந்தோம். தோழன் என்ற ஒருவனொடு அந்த மலர் வனம் முழுதும் பூத்து குலுங்கும் பூக்களோடும்,தழுவி செல்லும் அணை காற்றொடும், வண்ணங்களாய் நடனமாடும் நீர் கம்பிகளோடும் எங்கள் சந்தோஷம் இழைந்து ததும்பி கொண்டிருந்தது. மனம் ஒரு அணையாகி, மகிழ்ச்சியின் உச்சத்தை  உள்ளுக்குள் தேக்கி வைத்து கொண்டு,வார்த்தைகள் வழியே மகிழ்ச்சி நீராய் வழிந்து கொண்டிருந்தது.

இரவு உணவு முடித்து விட்டு மைசூர் நெடும்சாலையில் பேரூந்தில் விரைந்து கொண்டிருந்தோம். இரவை தூக்கத்திற்க்கு கொடுத்திருந்தனர் என்னையும், அபியையும் தவிர அனைவரும். முன்னால் இருந்த இருக்கையில் தனி ஆளாக அமர்ந்து நிலவை வழி நெடுக கூட்டி கொண்டு வந்து கொண்டிருந்தான். காலியான இருக்கையில் என்னை நிறைத்து அருகில் அமர்ந்தேன். அந்த கரும்இருளில் பேரூந்தினுள் நான்கு நட்சத்திரங்கள் மின்னி கொண்டிருந்தன. எந்த ஒளியும் பிரதிபலிக்காதஉண்மையான முகம் இருளுக்குள் தான் புதைந்திருக்கும். புதைந்த எங்கள் முகத்தை ஒருவருக்கொருவர் அகழ்ந்து பார்த்து கொண்டிருந்தோம்.

"ரொம்ப சந்தோஷமா இருக்கேன் சுபா." புன்னகையோடு கூறினான். அபியின் நட்சத்திரம் அதிகமாய் ஒளி வீசி கொண்டிருந்தன.

"ஏன் திடீர்னு சொல்ற.." தெரிந்த பதிலுக்கு கேள்வி கேட்டிருந்தேன்.

"வாழ்க்கைல சில தருணங்கள் தான் எதிர்பாராம சந்தோஷ்மா அமையும். அப்படி ஒரு நாளா இருந்துச்சி இன்னைக்கு. நான் இன்னும் பிருந்தாவனத்துல தான் இருக்கேன் சுபா"

"டீன் ஏஜ் பையனுக்கும், பொண்ணுக்கும் உள்ள தனிமையில ஏதோ ஈர்ப்பு இருக்குல அபி."

" இது அதையும் தாண்டி ஏதோ ஒண்ணு சுபா. என்னால உணர முடியுது ஆனா சொல்ல முடியல. இன்னைக்கு உன் மேலயும், உன் வார்த்தை மேலயும் ஒரு அதீத நம்பிக்கை எனக்குள்ள நிறஞ்சிருக்கு."  அபியின் பேச்சில் பூவின் சுகந்தம் பரவிருந்தது.

" இது தான் சரியான நேரம் கேட்ராலாம். இப்படி ஒரு தனிமை எப்ப வாய்க்கும்ண்ணு தெரியாது" எனக்குள் நானே முடிவெடுத்திருந்தேன்.

"ஹே சுபா என்ன பேச்சை காணும்..?"

" ஆம்..அது வந்து...அது ஒண்ணுமில்ல. உன்ட்ட ஒண்ணு கேக்கணும் , பட் நீ கோவப்படக்கூடாது அபி"

" சொல்லு சுபா. உன்ட்ட கோவமா..?" புன்னகை ஏந்தி இருந்தான் இதழ்களில்.

"அண்ணன் ரெண்டு பேருக்கும் சர்ட் வாங்கீன , அப்பாவுக்கு ஏன் எதும் வாங்கல.?" என்று கேட்டேன்.அமைதியாயிருந்தது என் குரல்.

"என்ன வாங்கனும்ன்ணு தெரியல…" என்றான். உயிரற்று இருந்தன அவன் வார்த்தைகள்.

"தெரியலயா..? பிடிக்கலயா..?" என்று கேட்டேன். என் குரல் சற்று ஓங்கிருந்தது.

"இரண்டும் தான்". என்றான். அபியின் கண்கள் ஜன்னலுக்கு வெளியே கரும் வானத்தை வெறுமையாய் நோக்கி கொண்டிருந்தது.

"அவர் மேல உனக்கு ஏன் இந்த வெறுப்பு..? அவர் உன் அப்பா அபி..? " அமைதியாக கேட்டேன். இதை தான் நான் கேட்பேன் என்று அபிக்கு தெரிந்திருந்தது. அதே வெறுமையோடு திரும்பினான்.

"இந்த பத்தொன்பது வருஷத்துல, அவர் என் முகம் குடுத்து பேசுனது கெடயாது. தெரியுமா சுபா..? எல்லாம் அண்ணன் வழியா தான். வெறுப்பு எனக்கில்ல. அவருக்கு தான். அம்மா என்னால இறந்து போயிட்டாங்கல்ல அதான்." கோவமாக கூறினான். அவன் முகம் முழுவதும் வெறுப்பு படர்ந்திருந்தது.

" அத நீ நம்புறியா அபி.." என்று கேட்டேன்.

"என் காதால கேட்டுருக்கேன். "இவன பெத்துட்டு,என்ன தனியா விட்டுட்டு போய்ட்டா,எல்லாம் என் விதி." அதுக்கு மேல என்னால நின்னு கேக்க முடியல. முதல்ல என் மேல கோவம் வந்துச்சி. அப்றம் அவர் மேல கோவம் வந்துச்சி. விடு சுபா. இத ஒண்ணும் பண்ண முடியாது.” வெறுமையாக பதிலுரைத்தான். அவன் வார்த்தைகள் வேகமெடுத்து அவன்  நினைவுகளில் முட்டி அடங்கின.

" இல்ல அபி நீ உன் அப்பாவ தப்பா புரிஞ்சுருக்க. ஒரு நாள்,நான் உங்க வீட்டுக்கு வந்திருந்தப்போ, நீ உன் ஃபேமிலி ஆல்பம் எடுத்து என்ட்ட காட்டிட்டு இருந்த. அப்ப தான் பார்த்தேன் உங்க அண்ணன் ரெண்டு பேரும் உங்க அப்பா மாதிரி இருந்தாங்க. நீ அப்படியே உங்க அம்மா மாதிரி இருந்த. உன் கண்ணு முழுசா உன் அம்மா தான் தெரியீறாங்க அபி.." என்று கூறினேன்.

"அதான் என் வீட்டிலே எல்லாரும் சொல்லுவாங்கலே..அதுக்கு என்ன.."
என்றான்.
அபி இந்த உராயாடலுக்குள் இருந்து வெளியேற துடித்தான்.

"அபி நம்ம அம்மா, அப்பா எல்லா நேரமும் ஒருததர ஒருத்தர் காதலிச்சிட்டே தான் இருக்காங்க. நம்மல அவங்க கொஞ்சும் போதெல்லாம் அவங்க அவங்களோட துணைய தான் கொஞ்சுறாங்க.
என் மூக்க பாத்து, அம்மா,"அப்பிடியே அப்பா மூக்கு. பிடிச்சு வச்ச மாதிரி இருக்கு பாரு"ன்னு சொல்லும் போதெல்லாம் அம்மாவோட கண்ணுல அப்பா வந்துட்டு போவாரு. அபி, நாமெல்லாம் அவங்க காதலோட குறியீடு. காமத்தோட பரிசு. அப்டி தான் உங்க அப்பா இறந்து போன அவர்  மனைவிய உன் வழியா பாக்க தொடங்கியிருப்பாரு. அவரால எதையும் இயல்பா செய்ய முடிஞ்சிருக்காது. அந்த நினைவுகள் அவர அந்த காதலுக்குள்ள, நாட்களுக்குள்ள இழுத்துட்டே இருந்திருக்கும்.அவருக்கு  வேற வழி தெரிஞ்சிருக்காது. உன்ன தவிர்த்துட்டு வேக  வேகமா தன் வேலையில ஓட ஆரம்ப்ச்சிருப்பாரு. அதனால தான் நீங்க மூணு பேரும் இந்த இடத்துக்கு வர முடிஞ்சிருக்கு." என்றேன். என் வார்த்தைகள் எங்களை சுற்றி ஒரு அதிர்வாய் நிறைந்திருந்தது அவ்விருளில்.

"இப்ப நீ என்ன சொல்ல வர்ற சுபா.?" என்று கேட்டான். அபியின் வார்த்தைகள் உடய துவங்கி இருந்தன.

"முப்பநதைந்து வயசுல மனைவிய இழந்துட்டு பதினைந்து வருஷமா தனியா உங்கள வளக்க எவ்ளோ கஷ்டப்பட்டிருப்பாரு. உங்க அம்மாவ எவ்ளோ காதலிச்சிருந்தார்ன்னா இன்னொரு கல்யாணம் கூட பண்னிக்காம இருக்காரு. உங்க அப்பாக்குள்ள இருக்குறதது வெறுப்பு இல்ல அபி. வலி. அத உன்னால மட்டும் தான் தீக்க முடியும் . இனியும் அவர அந்த நினைவுகள புதச்சு வைக்க விடா. உன்னோட அன்பாலையும்,பார்வையாளயும், உன் வார்த்தையாளையும் தான் அவர் வலி தீரும். செய் அபி. உன் அப்பாக்கு உன்ட்ட குடுக்கறத்துக்கு நிறய காதல் இருக்கு. அத சந்தோஷ்மா வாங்கு அபி." என்று கூறினேன்.

எந்த நொடியில் நீ உடைந்து போயிருந்தாய் என்று தெரியவில்லை. ஈரம் கசியும் உன் கண்ணீர் என் தோள்கள் வழியே சரிந்து கொண்டிருந்தது. என்னை அறியாமல் என் கை விரல்கள் உன் விரல் இடைவெளிகளை  நிறைத்திருந்தன. என் கைகள் தந்த அழுத்தம் வழியே என்ன உணர்ந்தாய் அபி.என் தோள் வாங்கி உறங்கி போன உன் முகம் என்ன சொல்ல வந்தது என்னிடம். அந்த இருளுக்குள் நம் இருவருக்கும் இடையில் என்ன மறைந்திருந்தது அபி.

விரல் வழி கசிந்த ஈரம் கைகளை நனைத்து ஜில்லிட, துறை முகப்பில் நின்றிருந்தேன். அபியை தேடி எங்கள் கட்டிடத்தின் உள்ளே நடந்து சென்றேன். படிக்கட்டுகளில் ஏறி மேலே சென்று பார்த்தேன். அபி இன்னும்  ஹெச். ஓ. டீ ரூமில் தான் இருந்தான் . கீழே இறங்காமல் நேராக வகுப்புக்குள் நுழைந்தேன். யாரும் இல்லாமல் அவ்வறை நிசப்தம் நிறைந்திருந்தது. என் காலடிகள் எனக்கே கேட்க என் இடத்தில் போய் அமர்ந்தேன்.

திறந்திருந்த ஜன்னல் வழியே வெளியே பார்த்தேன். இலைகள் நீர் வடித்து கொண்டிருந்தன. தொக் தொக் என்ற சப்தத்தின் கூர்மையில். நான் மறுபடி மறுபடி நினைத்து கொண்டிருக்கும் அந்த நினைவுக்குள் சென்றிருந்தேன்.
இந்த நினைவு தான் என்னை முழுமையாக சூழ்ந்திருக்கிறது.

 பெங்களூர் பயணத்திலிருந்து சரியாக ஒரு மாதம் கழித்து,  சனிக்கிழமை காலை 8.30 க்கூ ஊருக்கு செல்வதற்காக திருநெல்வேலி ரயில் நிலையம் வந்திருந்தேன். நெல்லை எக்ஸ்ப்ரெஸ் முதலாம் நடைமேடைக்கு வெற்றிகரமாக வந்து சேர்ந்திருந்தது. அந்த இயந்திர பாம்பின் உள்ளிருந்து இறங்கும் அனைவரிடத்திலும் ஒரு பரபரப்பு. ஓர் இடத்திலிருந்து ஏறி மற்றோர் இடத்தில் இறங்கி, பின் அங்கிருந்து ஏறி,இறங்கும் இந்த முடிவற்ற பயணங்களில் தான் வாழ்க்கை தன் சுவாரசியத்தை ஒளித்து வைத்திருக்கிறது. எல்லோரையும் ஒரு வெற்று பார்வை பார்த்து விட்டு நாலாவது நடை மேடையில் செங்கோட்டை பசஞ்சருக்காக போய் அமர்ந்தேன். மனம் அபியை எதிர் நோக்கி இருந்தது.

நீல ஜுன்ஸ், சிவப்பு டீ-ஷர்ட் உடையில் தூரத்தில் அபி வந்து கொண்டிருந்தான். அவன் உதிர்க்கும் புன்னகையை கூட வாங்கி கொள்ள முடியாதபடி சிந்தித்து கொண்டிருந்தேன்.

"ஹலோ மேடம்,என்ன சிரிச்சா சிரிக்க கூட மாட்டேங்ரீங்க" என்று சொல்லி கொண்டே என் பக்கத்தில் வந்து அமர்ந்தான்.

 "ஸாரி, ஏதோ யோசிச்சிட்டு இருந்தேன்." என்றேன். என் குரல் அமுங்கியிருந்தது.

"நேத்தே உன்ட்ட அத பத்தி திங்க் பண்ணாதண்னு சொன்னேன், நீ கேட்டா தான." என்றான். அபி சற்று கோவமடைந்திருந்தான்.

"எப்படி அபி திங்க் பண்ணாம இருக்க சொல்ற. என்ட்டயே நேரா கேக்குறாங்க, "என்ன நீயும், அபியும் லவ் பண்றீங்களாண்ணு..?" என்று கேட்டேன். எனக்குள் அந்த கேள்விகள் ஒளித்து கொண்டே இருந்தன.

"ஆமான்னு சொல்லு. நீ என் மேல அன்பு செலுத்திறியான்னு கேக்குறாங்க. அவ்வளவு தான.!."  என்று சிரித்து கொண்டே சொன்னான்.

"விளயாடாத அபி. ஸீரீயஸ் ஆ பேசு. உனக்கு கோவமே வரலயா.?"

"எதுக்கு கோவப்படணும். நம்மள பத்தி இப்படி பேசுறாங்கன்ணா...!"
சொல்லிவிட்டு, அவன் சிரிப்பை அடக்கி கொண்டிருந்தான்.

"ஆமா. நான் காதலிக்கிறனா .? காதலிக்கலையா..? அப்டீன்னு முடிவு பண்ண அவங்க யாரு.?" சத்தமாக கேட்டேன்.இன்னும் உரக்க கத்த வேண்டும் போல் இருந்தது எனக்கு.

"ஓ. கே. அவங்க யாரும் முடிவு பண்ண முடியாது தான். பட், அதுக்கு இப்ப என்ன பண்ணலாம்ன்ணு சொல்ற சுபா. போய் சண்ட போடலாமா..!" என்று கேட்டான். அபியின் இதழ்களில் இருந்து சிரிப்பு மறைந்திருந்தது.

" அட் லீஸ்ட், பதிலுக்கு ஏதும் கேக்க வேண்டாமா..?" என்றேன்.கெஞ்சல் போல் இருந்தது என் குரல்.

" எப்படி.? ஏன் இப்படி சொல்றீங்கன்ணா.? உடனே அவங்க," நீங்க  பெங்களூர் டிரிப்ல பஸ்ல கைய புடிச்சிட்டு வந்தீங்கல்ல" ன்னு சொல்லுவாங்க. கைய புடிச்சிட்டு வந்தா காதல் வந்துரும்ன்னு சொல்றவங்ககிட்ட போய் என்ன கேக்க முடியும் சொல்லு." என்று கேட்டான். அபி எரிச்சல் அடைந்திருந்தான்.

" நாம அத எக்ஸ்ப்லைன் பண்ணலாம் அபி.." நான் இன்னும் இறங்கியிருந்தேன்.

"லூசா நீ. நாம எதுக்கு அவங்ககிட்ட எக்ஸ்ப்லைன் பண்ணனும்"  என்றான். அபியின் குரல் சத்தமாக ஒளித்தது.

"யாரு நான் லூசா.?  நீ தான். உனக்கு தான் என் ஸிச்சுவேஷன் புரியல,என்ன  புரியல. இதோட பிரச்சின புரியல. அப்றம் நான் உன்ட்ட இத பத்தி பேசுறது முட்டாள்தனம். நான் கிளம்புறேன்." கோவமாக  கத்தினேன். நடைமேடை முழுவதும் என் குரல் எதிரொலித்தது. வேகமாய் நடந்து சென்று யாரும் அற்ற பெட்டியின்  ஜன்னல் ஓரம் தனியாக அமர்ந்துவிட்டிருந்தேன். கூப்பிடும் தூரத்தில் நானும் அவனும் அமர்ந்திருந்தாலும் மௌனம் எங்களுக்குள் எல்லயற்று விரிந்திருந்தது.

ரயில் புறப்படும் முன் என் பெட்டியில் ஓடி வந்து அபி ஏறியிருந்தான். நேரே வந்து எதிரில் அமர்ந்தான். உள்ளுக்குள் மகிழ்ந்தாலும் ,அவனிடம் காட்டி கொள்ளவில்லை. வண்டி இயக்கமுற்றிருந்தது.
"நீ எங்க வாற..?"
"உன்னோட."
"எதுக்கு.?"
"சும்மா"

 "சும்மா எல்லாம் வேண்டாம் , நீ ஒழுங்கா டவுண்ல இறங்கி வீட்டுக்கு போய்டு.." என்றேன் எனக்கு அவன் மேல் இன்னும் கோவம் குறையவில்லை.

"கோவப்படாத சுபா, அவங்ககிட்ட புரிய வைக்க முடியாது அதான் அப்டி சொன்னேன்." கெஞ்சலாக கூறினான்.என் கண்கள் நகரும் மரங்களின் மேல் நிலையுற்றிருந்தது.

"இங்க பாரு சுபா." அபி என் கோவத்திற்க்கு வினையாற்றி கொண்டிருந்தான்.
"சொல்லு" மொட்டையாக வந்து விழுந்தது என் வார்த்தை.

"ரெண்டு பேர் விவாதம் பண்ணும் போது, ரெண்டு பேரும் நகர்ந்தா தான் ஏதாவது ஒரு முடிவுக்கு வர முடியும். ஆனா , நீ  அவங்ககிட்ட பேசுனா அவங்க நகராம, நம்மள அவங்க புள்ளிக்கு இழுத்துட்டு இருப்பாங்க. கடைசி வர முடிவுக்கு வராது இந்த விவாதம்." என்றான். ரயில் சக்கரத்தின் ஒலியை உடைத்து கொண்டு வந்தன அவன் சொற்கள்.

“"அப்ப என்ன தான்  பண்றது..?" என்று கேட்டேன். எனக்கு ஒரு தீர்வு தேவைப்பட்டது.

"ஒண்ணும் பண்ண வேண்டாம், அப்டியே விட்ரலாம் சுபா. உனக்கும், எனக்கும் இடையில என்ன உறவுன்ணு நம்ம புரிஞ்சிக்கிட்டா , தெரிஞ்சிக்கிட்டா போதும். இது நம்மல பத்தி உள்ளது. அவ்வளவு தான்."  இருக்கையின் நுனியில், முதுகு வளைந்து அமர்ந்து பேசி கொண்டிருந்தான். ஆவியான வெந்நீர் போல் காலை காற்று ஜன்னல் வழியே வந்து கொண்டிருந்தது.

"நமக்குள்ள என்ன உறவு..?, சொல்லு அபி.." என்று கேட்டேன்.  நான் அவனை எதிர் நோக்கி காத்திருந்தது இந்த கேள்விக்காகத்தான்.

" ஏன் உனக்கு தெரியாதா..?" கேட்டு விட்டு நிமிர்ந்து அமர்ந்தான்.

" தெரியும், பட் நீ சொல்லு.." என்றேன். அவன் இந்த கேள்விக்கு பதில் சொல்ல வேண்டும் என்று விரும்பினேன்.

இருக்கையின் பின்னால் சென்று சாய்ந்து அமர்ந்தான். சில நொடிகள் அமைதியாக இருந்து விட்டு."சுபா அவங்க உன்ன சந்தேகப்படுறாங்களா..?

இல்ல, நீ என்ன சந்தேகப்படுறியா..?". வெறுமையாய் இருந்தது அவன் கேள்வி.

"சந்தேகம் எல்லாம் இல்ல அபி, நீ அத சொல்லனும்ன்ணு போல் தோணுது. சொல்லேன்." என் இருக்கையின் நுனிக்கு நான் வந்திருந்தேன்.

" நோ சுபா. என்னால சொல்ல முடியாது." வீடுகளும் . ஆட்களும் அற்ற மண்மேட்டின் மீது, நீண்டு செல்லும் சாலையை குறுக்காக வெட்டி கொண்டு, எங்கள் ரயில் சென்று கொண்டிருந்தது. என்னிடமிருந்து விலகி அபி அந்த மண்மேட்டில் தனியாக நடந்து செல்வது போல் இருந்தது.

"ஏன் அபி ..?" என்றேன். என்ன சொல்லி அவனை அழைத்து வருவது என்று எனக்கு தெரியவில்லை.

" நான் சொல்ற வார்த்தைகள் மேல தான் நம்பிக்கைன்னா, என் மேல இல்லயா..?" என்று கேட்டான். இருவரும் அவர் அவர் இருக்கையின் நுனியில் அமர்ந்திருந்தோம்.

" நான் உன் ஃப்ர்ண்டுன்னு சொல்றததுல உனக்கு என்ன கஷ்டம் அபி..?" என்றேன் . இந்த பதில் தான் அவனிடமிருந்து எனக்கு வேண்டியிருந்தது.

"கஷ்டம் தான். ஏன்னா அப்டி சொல்றது ரொம்ப செயற்கையா இருக்கும் சுபா. ப்ரண்ட்ஷிப் சொல்றதோ, சொல்லிக்காட்டுறதோ. அது  இயல்பா உணர்ரது,உணரப்படுறது. உனக்கு புரியும்ன்னு நினைக்கிறேன் சுபா." என்றான்.

அவனுக்கு என்னையும் அவனுக்குள் ஈர்த்து கொள்ளும் மொழி தெரிந்துதிருந்தது.

" புரியுது அபி. பட் மனசுக்குள்ள ஏதோ ஒரு பயம் இருந்துட்டே இருக்கு." குழம்பிய என் மனதை நடுங்கும்  கைகள் வழியே பார்த்து கொண்டிருந்தான்.
எதிரில் இருந்தவன் என் அருகில் வந்து அமர்ந்தான். நடுங்கும் என் கைகளுக்குள் அவன் கைகளை புதைத்து அழுத்தி, என் கண்களை நோக்கி,"என்ன பயம்..?" என்று மென்மையாக கேட்டான்.

"சொல்ல தெரியல , ஆனா ஏதோ ஒரு பயம்" சொல்லிக்கொண்டே என்னையறியாமல் அவன் தோள்களில் சரிந்திருந்தேன். என் கண்ணீர் அவன் சட்டையை நனைத்தது.

சாய்ந்த என் தலை மேல் அவன் தலை சாய்த்து," சுபா, வாழ்க்கைல இது நமக்கு நடக்கலயேன்னு  வருத்ப்படுறதும், இது நடந்துருமோண்ணு பயப்படுறதும் முட்டாள்தனம். எது நடந்தாலும்.. அது சரின்னா..சந்தோஷமா ஏத்துகிறததும் , சரியில்லன்னா.. அதுல இருந்து வெளிவர்றதும் தான் புத்திசாலித்தனம். இவ்வளவு தான் வாழ்க்கை." சொல்லிக்கொண்டே என் தலை மீது சாய்ந்து அமர்ந்திருந்தான்.

காலை பத்து மணி சூரிய வெளிச்சம், நாளின் துவக்கத்தை கொடுத்து, தன் ஒளியை எங்கும் செலுத்தி கொண்டிருந்தது. அந்த ஒளி எங்கள் ஜன்னல் கம்பிகளின் வழியே நுழைந்து, அமர்ந்திருந்த எங்கள் மேல் கருப்பு வெள்ளை கோடுகளாய் படர்ந்திருந்தது. இதமான வெயிலில் நனைந்து, அந்த தனிமையில் அவன் தோள் சாய்ந்து பயணம் செய்து கொண்டிருந்தேன். எனக்கு தேவையானது என்பதால் அவன் மௌனமாய் இருந்தான். வெள்ளி முலாம் பூசிய தாமிரபரணியை கடந்து ரயில்  சென்று கொண்டிருந்தது.

திடீரென்று என்ன நினைத்தான் என்று தெரியவில்லை.புதைத்த கைகளை பிரித்து எடுத்து, என் பின்புறம் வழியாக என் உடலைச் சுற்றி என் இடுப்பினில் கை வைத்து, அவன் அருகில் இன்னும் நெருக்கினான். மற்றோர் கையால் என் முன் வயிற்றை அழுத்தி பிடித்தான். இப்போது முழுவதுமாக நான் அவனுக்குள் இருந்தேன். அனிச்சையாய், என் கைகள் கொண்டு வயிற்றின் மேல் இருந்த அவன் கைகள் மேல் வைத்து இன்னும் அழுத்தினேன். என்னை நானே நெருக்கி அவன் கைகளுக்குள் நிறைத்தேன். அந்த நெருக்கம் நிறைவாய் இருந்தது. கைகள் எடுத்து என் கன்னம் திருப்பி, வழிந்த என் கண்ணீர் மேல், அவன் இதழ்களால் என் கன்னத்தில் முத்தமிட்டான். அழுத்தம் இல்லாத முத்தம் பூ வருடியதாய் இருந்தது.

என் அருகில் இருந்து இறங்கி, இருக்கைகளுக்கு நடுவே முழங்காலிட்டு அமர்ந்து ,அவன் கரங்களால் என் கன்னங்களை ஏந்தினான். என் முகம் அவன் கைகளுக்குள் ஒரு புறாவாய் மாறிஇருந்தது. சிறிய மிரண்ட புறா கண்களை பார்த்து,"சுபா, எத நினச்சும் மனச போட்டு குழப்பிக்காத. ஸெமெஸ்டர் லீவ நல்லா என்ஜாய் பண்ணு. நான் உன் கூடவே இருக்கேன். நீ பயப்படுற மாதிரி எதும் நடக்காது. லீவு முடிஞ்சு வரும் போது எல்லாம் நார்மலா இருக்கும். ஐ மிஸ் யூ சுபா." என்று கூறினான்.

என் கண்கள் புறத்தை மறந்து அவன் கண்களை மட்டும் நோக்கி கொண்டிருந்தது. என்னையறியாமல் அவன் நெற்றியில் என் இதழ் பதித்திருந்தேன்.

"சுபா..சுபா." அபியின் குரல் காதுகளில் சன்னமாக ஒலித்தது.
கீழே போய் தேடி விட்டு வேகமாக வகுப்புக்குள் நுழைந்து கொண்டிருந்தான்." ஹே நீ இங்க இருக்கியா..! நான் கீழே போ தேடிட்டு வரேன். ஸாரி சுபா கொஞ்சம் லேட் ஆய்டுச்சி." என்று சொல்லி கொண்டே என் அருகில் வந்து அமர்ந்தான்.

  சிறகு உதறி எழும் பறவை போல் அவன் அமர்ந்ததும் நான் எழுந்து விட்டிருந்தேன். என் சிந்தனைகள் வழியே ஒரு முடிவை எட்டியிருந்தேன். அவனிடம் இதை சொல்லிவிட வேண்டும் என்று தீர்க்கமாய் நின்றிருந்தேன்.

எழுந்து நின்ற என்னை அதிர்ச்சியாய் பார்த்து,"என்ன சுபா..? என்ன ஆச்சு..?" குழம்பி போய் கேட்டான்.

"போதும் அபி. இது வேண்டாம். நீ என்ன சொல்லவறன்ணு எனக்கு புரிஞ்சிருச்சி. பட், தயவுசெஞ்சு அத என்ட்ட சொல்லாத. என்னால ஏத்துக்க முடியாது. இது இங்க தான் வந்து நிக்கும்ன்னு எல்லாரும் சொல்லும் போது நான் நம்பல. அவங்கள எதித்து நின்னேன். ஆனா கடைசியில நான் தான் தோத்துட்டேன். என்ன கொஞ்சம் கொஞ்சமா நகர்த்தி இங்க கொண்டு வந்திருக்க. உன்னோட இந்த நகர்வுல எனக்கு எதும் தெரியல, இன்னும் சொல்ல போனா என்னால கண்டுபிடிக்க முடியல. இப்ப கடைசியா சேர்ற இடம் வரும் போது தான் உன் நகர்வு எவ்வளவு ஆழமானதா இருந்திருக்குன்னு தெரியுது.
 நீ என்னோட எல்லா கேள்விக்கும் தீர்க்கமான விளக்கமும், தெளிவான காரணமும் சொல்லலாம். ஏன்னா ,உன்ட்ட அதுக்கு சாத்தியம் இருக்கு. பட் என்கிட்ட அப்டி ஏதும் இல்ல. ஏன்னா, என்னால நீ சொன்னது எல்லாம் இயல்பா நடந்துச்சி.அத ஒரு நாளும் அர்ததப்படுத்த முடியாது அபி." என் ஏமாற்றங்கள் கோவங்களாகி வார்த்தைகளாக விரைந்து வந்தன.

அபி அதிர்ச்சி விலகாமல் அப்படியே இருந்தான். அவன் பார்வை சலனமற்று இருந்தது.என்னால் இன்னும் அமைதிக்கு வர முடியவில்லை

" அன்னைக்கு பெங்களூர் டிரிப்ல என் கைகள் தந்த அழுத்தமும், உன் முகம் தாங்குன தோளும் உன் நகர்வுக்கு காரணமா இருந்திருந்ததுன்னா என்ன மன்னிச்சிரு. அப்பவும் நீ எனக்குள்ள நண்பனா தான் இருந்த. தோழன்னு அறிமுகப்படுத்துனவனோட மணமேடையில ஒண்ணா நிக்கிறத பாக்கும் போது, இவங்கள்லாம் நண்பர்கள்ன்னு ஏன் உலகத்த ஏமாத்துறாங்கன்ணு தோணும். தோழி என்பவள் காதலியாக்கபடுறத விரும்பாதவ நான்.

அதனால தான் அண்னைக்கு ட்ரேயீன்ல நீ என் ப்ரண்ட்ன்னு உன் வாயால சொல்ல வைக்கணும்ன்னு நினச்சேன். ஆனா, நீ கடைசி வரைக்கும் அத சொல்லல. அன்னைக்கு எனக்குள்ள இருந்த குழப்பம். சோர்வு, கவலை இதனால தான் நான் என்னை உன் கைகளுக்குள்ள நிறைச்சேன். நீ முத்தமிட்ட நொடியில என் எல்லா கஷ்டத்தையும் மறந்தேன். உன் ஆறுதலுக்கு நன்றி சொல்ல தான் உன் நெத்தில முத்தமிட்டேன். ஆனா நீ உன் அணைப்பு, முத்தம் வழியா நீ சொல்ல நினச்ச காதலுக்கான யூகத்த எனக்குள்ள விதச்ச. அது, நீ நேத்து நைட் உன்ட்ட தனியா ஒரு விஷயம்  சொல்லணும்னு சொல்லும் போது தான் புரிஞ்சிச்சி . ஸாரி அபி, நான் எதிர்பார்த்தது காதலோட ஒரு நண்பனத்தான்,  நட்போட ஒரு காதலன இல்ல." சுவர் சூழ்ந்த அந்த அறையில் என் வார்த்தைகள் பெரு மழையாய் அவன் மேல் பெய்து முடித்திருந்தது. நிரம்பி வழிந்த மனகுளம் கரை உடைத்து வெளியேறி எடையற்றது போல் இருந்தது. அதிர்ச்சியாய் நோக்கிய அவன், தன் பார்வையிலிருந்து ஒரு கணம் கூட என்னை விட்டு நகரவில்லை. நான் பேசி முடித்த நொடிகளில் ஒரு ஏமாற்ற புன்னகை கொண்டிருந்தான்.

அபியின் குரல் அமைதியாக அதிர்ந்தது," நீ இப்டி நினப்பண்ணு நினச்சேன். இதில் உன் தப்பு எதும் இல்ல சுபா. பத்து மாசம் பழகுனவன் மேல ஒரு அதீத நம்பிக்கை வந்திராது. அப்டி வந்தாலும் சுத்தி உள்ளவங்க சும்மா விடமாட்டாங்க. இவங்களுக்கு காதல் பத்தியே ஒண்ணும் தெரியாத போது  நட்ப பத்தியா தெரிஞ்சிரப் போகுது. ஒரே வயசுள்ள ஆணும், பெண்ணும் காதலன் , காதலியா மட்டும் தான் ஆக முடியும்ன்னு நம்புற சமூகம் இது,அவங்களுக்கு எப்படி புரிய வைக்க முடியும் நம்ம உறவ…? ஆனா,உனக்கு என்னால முடியும்." என்றான்.

" என்ன சொல்ல வர்ற அபி"..

" எனக்குள்ள உன்கிட்ட ஒரு உறவு இருக்கு, நட்ப தாண்டி.அதனால தான் அன்னைக்கு ட்ரேயீன்ல நான் ஏதும் சொல்லல. எனக்குள்ள நீ என்னவா இருக்கன்னு சொல்ல தான் உன்ன இங்க வர சொன்னேன். இத ஏத்துகிறதும், ஏத்துகாததும் உன் கைல தான் இருக்கு. ஆனா எனக்குள்ள இருக்குற  நீ நிஜம்." மூழ்கடித்து கொண்டிருந்த நீரிலிருந்து மேலே வந்து கொண்டிருந்தான்.
என் கண்கள் எந்த பதிலும் சொல்லாமல் மௌனமாய் பார்த்து கொண்டிருந்தது அவனை.

அவன் நிதானமாய் தொடர்ந்தான்." அம்மாக்கள் அறிமுகப்படுத்தாத வரைக்கும் அப்பாக்கள் அன்னியர்கள் தான். அந்த பெங்களூர் டிரிப்ல நான் உடஞ்சு அழும் போது உன் கைகள் கொடுத்து என்ன  ஓட்ட வச்சிட்டு இருந்த, நீ குடுத்த அழுத்தம் வழியா தான் என் அப்பா எனக்கு அறிமுகப்படுத்தப்பட்டார் சுபா. இல்லாத அம்மாவுக்காக அழுத நான், இருக்குற அப்பாவ நெனக்கல. என்ன நினச்சு பாக்க வச்சது நீ தான் சுபா. அதுக்கு அப்றம் ஒரு நாள்  நானும், அப்பாவும் உக்காந்து பேசிட்டு இருக்கும் போது." ஸாரி பா, காரணமே இல்லாம உங்கள வெறுத்துட்டேன். அம்மாவோட ஆசப்படி எங்க மூணு பேரையும் வளத்துடீங்க. என் கண்ணுல தெரியீற அம்மாவ தவிர்த்துட்டு பதினஞ்சு வருஷமா ஓடிரூக்கீங்க. அம்மாவ எவ்ளோ லவ் பன்னீங்க பா" ன்னு கேட்டேன். சிரிச்சிட்டே "பன்னீங்களா வா..?" , “பண்ணிட்டு இருக்கேன் டா” ன்னு சொன்னார். அந்த வார்த்தையில உடஞ்சு அவர் மடில விழுந்து அழுதுட்டேன். இருபது வருஷம் கழிச்சு என் தல முடிய கோதி விடற அப்பாவ எனக்கு குடுத்தது. நீ சுபா.

அவன் தன் வார்த்தைகளால் என் கோவங்களை உதிர்த்து கொண்டிருந்தான்.

"அப்றம் அன்னைக்கு  ட்ரேயீன்ல, அந்த மௌனத்த உடச்சிட்டு உன் வயித்துல என் கைகளால அழுத்தினேன். என்னால முடியில சுபா, இந்த இருபது வருஷமா ஒரு மகனா அம்மாவோட ஸ்பரிசத்த நான்  தீண்டுனதில்ல. அன்னைக்கு அந்த நொடியில எனக்குள்ள இருந்த ஆறு வயசு பையன என்னால கட்டுப்படுத்த முடியல சுபா. நான் உன்ன என் கைகளால இறுக்கி அனச்சிறுக்கலாம், வயித்த அழுத்தி இருக்கலாம். அந்த கைகளுக்கு  வேனா இருபது வயசா இருந்திருக்கலாம், மனசு ஆறு வயசு பையனா தான் இருந்துச்சி சுபா. தான் அழுதாலும்,அம்மா அழுதாலும் ஓடி வந்து வயித்த சுத்தி கட்டி பிடிக்கிற பையனா மாறி போய்ருந்தேன் நான். உனக்கு முத்தம் குடுக்கும் போது, இடுப்புல இருக்குற பையன் அம்மா வருத்தப்படும் போது கன்னத்த திருப்பி அவன் பிஞ்சு அதரத்தால முத்தம் குடுப்பான். அந்த சின்ன பையனா மாறி போய்ருந்தேன் சுபா. கடைசியா, உன் கன்னம் ஏந்தி உன்ன பாத்து பேசி முடிக்கும் போது, என் நெத்தி மேல நீ குடுத்த அந்த முத்தத்துல உன் மகனா மாறிருந்தேன் ம்மா." அவன் கண்கள் முழுதும் ஈரமாயிருந்தது. வார்த்தைகள் நீர் முட்டி வந்தன.

"நம்ம வாழ்க்கைல நம்ம எந்த திசைய நோக்கி பிரிஞ்சு போனாலும்,என்னைக்கும் உன் ஆட்காட்டி விரல, ஐந்து விரல்களால பிடிச்சு நடக்குற ஒரு மகனா தான் நான் இருக்கணும்னு ஆசப்படுறேன்ம்மா." தலை குனிந்து பேசி முடிததிருந்தான்.

அமர்ந்திருந்த அவன் அருகில் சென்று, அவன் முகத்தை என்  இரு கைகளால் இழுத்து என் வயிற்றினுள் புதைத்து ,அவன் உச்சந்தலையில் கண்ணீர் வழிய முத்தமிட்ட கணத்தில் நான் அவன் தாய் ஆயிருந்தேன்.

       ---பாரதிசரண் -

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக