திங்கள், 15 பிப்ரவரி, 2016

காதல் திரை


என் விழி 
கடக்கும் பெண்களில் 
அவள் தான் "அழகி". 

என் பார்வை 
படும் ஆண்களில் 
அவன் தான் "அழகன்". 

என் காதல் 
பூக்க அவள் 
"கண்ணெதிரே தோன்றினாள்" 

உன் காதல் 
அறிய என் மனம் 
"அலைபாயுதே" 

என் வருகைகள் 
சதமானது உனை கொண்ட 
"கல்லூரி" 

கைகளை நிறைத்தது 
உன் பெயர் கொண்ட 
என் "புத்தகம்" 

இசையால் நிறையவில்லை.. 
என் செவிக்கு தேவை 
உன் "மொழி" 

நட்பை தா 
சொல்கிறேன் அனைவருக்கும் 
நீ என் "நண்பன்" 

தோழனாகிவிடேன் 
காதலித்துகொண்டே அவளிடம் 
"சொல்லாமலே" 

நான் பேச நீ கேட்க... 
நீ கேட்க நான் பேச... 
என்னோடு உன் 
"மௌனம் பேசியதே". 

உன்னோடு மட்டும் 
உணர்கிறேன் புதிதாய் 
"தினந்தோறும்" 

விடிய விடிய பேசினாலும் 
விடியலின் துவக்கத்தில் என் காதலை 
"சொல்லத்தான் நினைக்கிறேன்" 

இந்த பூக்களை மறைக்கமுடியவில்லை 
பிரதிபலிக்கும் என் காதல் 
"கண்ணாடி பூக்கள்" 

நம் உரையாடலின் 
ஒவ்வொரு வார்த்தையிலும் தெறிக்கிறது 
"புது புது அர்த்தங்கள்" 

இன்னும் ஏனடி தயக்கம் 
என் காதல் சொல்ல தயார் 
நீ "கேளடி கண்மணி" 

சொல்ல வேண்டியது உன் காதலா..? 
நம் காதல்..சந்தேகமிருந்தால் அந்த 
"பூவெல்லாம் கேட்டுப்பார்" 

இப்போதே சொல்கிறேன்.. 
இனியும் தாமதம் ஏன்..? 
நீ நிறைந்திருப்பது என் 
"மனசெல்லாம்" 

உன் அன்பின் வார்த்தைகளால்.. 
எனை வெட்கம் உடைத்து 
மலரசெய்யும் நம் காதல் 
"பூ" 

வார்த்தைகள் விழுங்கி 
புன்னகை சிந்தும் 
இதழ் மொழியும் உன் 
"மௌனம் சம்மதம் "
                                 ---------------பாரதிசரண் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக