வியாழன், 17 ஆகஸ்ட், 2017

உறுபசி விமர்சன கட்டுரை

சம்பத் என்னும் நண்பனை , அவன் இறப்பின் பின் நினைவுகளின் வழி மீண்டும் தொட்டு மீண்டு வரும் மூன்று நண்பர்கள் பற்றியது. எப்போதும் இறப்பு ஒருவரின் நினைவுகளை கிளர்ந்து எழ செய்பவையே. அந்த வகையில் சம்பத்துடன் விருப்பமற்று தொடர்பில் இருக்கும் அவர்களுக்கு , அவன் வாழ்வின் மேல் ஒரு கசப்பும் அசூயையும்  உள்ளது. இந்த கசப்பு , புற சூழல் எதிலும் கட்டுப்படாமல் வாழும் அவன் வாழ்வின் மேல் உள்ள பொறாமையின் வழியே உருவாகி வருகிறது. ஆனால் அவனோ யதார்த்த வாழ்வின் தோல்வியை மறைக்க தன் கட்டற்ற எண்ணங்களின் வழியே சுதந்திரமான வாழ்வை வாழ்வதாக காட்டி கொள்கிறான்.  

                     சம்பத்   தன் தங்கையின் இறப்பே, தன்னை சமமற்றவனாக மாற்றியதாக நினைகிக்கிறான். அந்த இறப்பே தன்னை தன் குடும்பத்திலிருந்து பிரித்து விட்டதாக எண்ணுகிறான். அது ஒரு குற்ற உணர்வு போல் வாழ்வு முழுதும் அவனை பின்தொடர்கிறது. குளத்திலும் , ஆற்றிலும் முழுமையாக நின்று குளிக்கும் போது மட்டும் அந்த குற்ற உணர்வு இல்லாமல் போகிறான்.அவன் தங்கை இறப்பின்  போதே  கடவுள் நம்ம்பிக்கை அற்றவனாக ஆகி விடுகிறான் என்று தோன்றுகிறது. பின் கல்லூரி அந்த விதையை பெரும் மரமாக்கிறது.

                      வாழ்வை சரியாய் வாழ்கிறோம் என்று எண்ணும் இந்த 3 பேருக்கும், சம்பத் அடையும் வீழ்ச்சி நடுக்கத்தையும் , பயத்தையும் தருகிறது. அவனை அவர்கள் சந்திப்பதே அவனிடத்தில் தங்களை பொருத்தி பார்க்க தான் என்று தெரிகிறது. எல்லாம் சரியாய் இருந்தும் , நம்மை விட சிந்தனையில் உயர்ந்தவனாக இருந்தும் அவன் எப்படி வீழ்ந்தான் என்று பேசவே அந்த பயணம் கொள்கிறார்கள், எனும் போது தமிழ் இலக்கியம் மேல் எவ்வித ஈடுபாடும் இல்லாமல் கற்ற இவர்கள் , சந்தர்ப்பங்களையும் , வாய்ப்புகளையும் பயன்படுத்தி நிலைபெற்று விட்டார்கள் என்ற தாழ்வு மனப்பான்மை அவர்களிடத்தில் எப்போதும் இருக்கிறது. புது யுகத்தில் தமிழ் கல்வியின் வீழ்ச்சியை சம்பத் மூலம் உணர்த்தும் வகையில் கூட இந்த நாவலை எடுத்து கொள்ளலாம். 
 
                  மேலும் மணியின் வாழ்வை முழுதுமாக சொல்லும் மூலம் அது கிட்டத்தட்ட சம்பத்தின் உலகம் போலே உள்ளது , அவனும் யாழினியை நினைத்து அலைபாய்கிறான். விதிவிலக்ககாக அவன் தட்டையான சிந்தனை உள்ள ஒரு சாமன்யனாக வாழ்கிறான் என்பதாலே , சம்பத்தின் வாழ்க்கை அவனுக்கு ஆச்சர்யமூட்டுகிறது. கல்லூரி காலத்தில் யாழினியின் தோழனாக , திராவிட இயக்க போராளியாக, போராட்டங்கள் மூலம்  சிறை செல்லும் மாணவனாக ஒரு கதாநாயகனை போல் வாழ்கிறான். பின் அவன் சந்திக்கும் போது சந்தோஷமான ஒரு வணிக பிரதிநிதியாக நட்டு , போல்ட் விற்று கொண்டிருக்கிறான். 42 வயதிலும் அவனாக விரும்பி திருமணம் செய்து கொண்டு வாழ்கிறான். இதெல்லாம் மணியினால் ஜீரணிக்க முடியவில்லை என்பதாலே , அவன் கோவத்தில் தன் தந்தையை அடிக்கும் செயலை கண்டித்து கடிதம் எழுதி அவன்  தொடர்பை துண்டிக்க துடிக்கிறான். நிச்சயம் மணியும் தன் தந்தையை அடிக்க வேண்டும் என தன் வாழ்நாள் முழுதும் நினைத்து கொண்டே இருந்திருப்பான். மேலும் அவனால் ஒரு அணிலை கூட தன் விருப்பதிற்க்காக வீட்டில் வைத்து கொள்ள முடியாத போதாமையை, முற்றிலும் தோற்று போன ஒருவனுக்காக எந்த குற்றமும் இல்லாமல் வாழும் ஜெயந்தியை பார்த்து பொறாமை கொண்டிருப்பான். அதனாலே மணி அவன் இறப்பை தன் இயலாமையால் நிறைத்து அழுது கொண்டே இருக்கிறான்.


      அழகர் உருவாக்கும் சம்பத் தன் பொருளாதார நிலையை எப்போதும் தோல்வியாக காட்டி கொள்ள விழையாத. ஆனால் அந்த தாழ்வு மனப்பான்மையை மறைக்க அழகரை உண்மை கொண்டு குத்தி காயப்படுத்தும் ஒருவனாக இருக்கிறான். திராவிட இயக்க குடுமத்தில் இருக்கும் அவனுக்கு சம்பத் கல்லூரியில் அடையும் பெயர் என்பது தாங்கி கொள்ள முடியாதையாகவே இருந்திருக்கும். எனவே தான் அவன் கல்லூரியை விட்டு மேடை பேச்சாளனாக மாறும் போது வந்து வாழ்த்துகிறான். அவனுக்கு தெரியும் இந்த இடம் தான் அவன் வீழ்ச்சியின் துவக்கம் என்று. அவனை  ரயில் நிலையத்தில் தனியாக காக்க வைத்து விட்டு செல்லும் போது அவனுக்கு தெரியும் அவன் ஆத்திரமடைவான் என்று அதனாலே , தன்  கையில் உள்ள பணத்தில் இரவுணவும் , பழமும் வாங்கி வந்து ,தன் செயலின் மூலம் அவனை கீழிறக்க நினைக்கிறான். டெல்லியில் அவனை சந்திக்கும் போதும் , வீடற்றவர்களை பார்த்து இவர்கள் மென் உணர்வினால் தான் இப்படி வாழ்கிறார்கள் என்றும், குகை மனிதனை போல் கோரை பற்களை உருவாக்கி கொண்டால் இந்த அடிமட்ட வாழ்க்கையிலிருந்து வெளிய வரலாம் என்று கூறுவது , அழகரை பார்த்து சொல்வது போலவே இருந்திருக்கும் அவனுக்கு. என்றாவது ஒரு நாள் சம்பத் அந்த கோரை  பற்களோடு தன்னை சந்திப்பான்  என்று அவன் அறிந்திருப்பான். அழகர் தன் மனைவியோடு ஆங்கில திரைப்படம் ஒன்றிற்கு வந்திருக்கும் போது , சம்பத் அப்படி ஒரு கூறிய பற்களோடு அவனை சந்திக்கிறான். ஒரு வேசியோடு அந்த திரைப்படம் வரும் அவன் ,அவளை அவர்களிடத்தில் அறிமுகப்படுத்துவதன் மூலம் அவர்களை தன் பல்லின் கூர் நுனிக்கொண்டு கிழிக்கிறான். அழகரின் மனைவியை பற்றி அவனிடத்தில் விசாரிக்கும் மொழியிலும் அந்த கூர்மை இருந்து கொண்டே இருக்கிறது. அப்போது  சம்பத் வாழ்வின் மிக பெரிய வெற்றியை அடைந்த பெருமிதத்தை அடைந்திருப்பான். இதனாலே அழகர் ஜெயந்தியை பற்றி ராமதுரையிடம் சந்தேகமாக கேட்டகிறான் , காரணம் அழகர் ராமதுரையை சம்பத்தின் இடத்தில வைத்து பார்க்கிறான். அவர்களின் நெருக்கத்தை அவன் அறிவான். சம்பத் அகம் திறந்து பேசும் ஒருவனாக இருந்தால் அது ராமதுரையாக மட்டுமே இருக்கும் என்று அழகர் அறிவான். அதனாலே அவன் அவனையையும் , சம்பத்தின்  மனைவியையும் இணைத்து சந்தேகிக்கிறான்.மனிதனிடத்தில் எப்போதும் கோரை பற்கள் மறைந்திருக்கின்றன. 
                   பணம் மட்டுமே, சந்தர்ப்பங்களை உருவாக்கி தருகிறது. அதுவே ஒருவனை உயர் நிலைக்கு செல்ல வைக்கிறது. அதனாலே அழகர் இந்த வாழ்வை அடைந்திருக்கிறான். அழகர் உண்மையில் சம்பத்தை சந்திக்க விரும்புவது அவன் தோல்விகளை கண்டு மகிழ்வுற அன்றி நிச்சயமாக வேறில்லை. ஏனென்றால் அவனுக்கு தெரியும் அவன் கரும்பு சாறு விற்று பிழைக்க வேண்டிய ஒருவனல்ல என்று. ஆனாலும் சம்பத் அவனிடத்தில் எப்போதும் தன்னை அவனை விட உயர்ந்தவன் என்ற இடத்திலே வைத்து அணுகுகிறான் அவன் இறப்பு வரை.


                ராமதுரை மட்டுமே சம்பத்தை முழுதும் அறிந்த நண்பனாக உள்ளான். அவனே சம்பத் இறக்க வேண்டும் என்றும், அதன் பின் செய்ய்ய வேண்டியதை பற்றியும் சிந்தித்து கொண்டிருந்தான். அதை ஒரு கடமையாய் போல் செய்து முடித்தான். எல்லாம் முடிந்து அந்த பெரு மழையின் நனைப்பில் அவனுள் இருந்த சம்பத்தை மொத்த நினைவுகள் கொண்டும் மீட்டுஎடுத்த போது, எதையும் முழுதும் வாழாமல் தோற்று போய் இறந்த நண்பனை நினைத்து பெருங்குரலெடுத்து அழுகிறான். தன்  வாழ்வு முழுதும் சம்பத்தை நினைவில் நிறுத்தி கொள்ள இருப்பவன் ராமதுரை மட்டுமே.

              

                        சம்பத் அவனுக்குள் ஒருவனாக உள்ளான். அதை அறிந்தவள் ஜெயந்தி மட்டும். அவன் தன்னை ஒரு தோல்வியின் மனிதன் என்றே நினைத்து கொள்கிறான். முழு சோம்பேறியான ஒருவன் , அதிர்ஷ்டத்தின் மூலம் வாழ்வின் பெரு மாற்றம் நிகழ்ந்து விடும் என்று நம்பி கொண்டிருக்கும் ஒருவன். கட்டற்ற காமம் கொண்ட ஒரு சராசரியன். மரணத்தை பற்றி எப்போதும் சிந்தித்து கொண்டிருக்கும் , அந்த முடிவை மட்டும் விரும்புவனாக உள்ளான். இதெல்லாம் மீறி அவனிடத்தில் ஒரு அறஉணர்ச்சி உள்ளது. அதே அவனை புற உலகின் போலி வாழ்வுக்குள் செல்லாமல் தடுக்கிறது. எனவே தான் அவன் பிழை திருத்தும் இடத்திலுருந்தும், செடிகளை விற்பதை மறுத்தும் செல்கிறான். அவன் மொத்த தோல்விக்கும் அவன் சொல்லும் ஒரு பாடலே காரணமாய் இருக்கலாம். ஜெயந்தி அவனிடத்தில் எதோ ஒரு உண்மை உள்ளது என்று நம்பினாள்.அந்த உண்மையினாலே அவனை விட்டு விலகாமல் மரணம் வரை துணை நிர்கிறாள். 

அப்படி ஒரு பெண் இருக்கிறாளா என்று பார்பதற்க்காகவே யாழினி சம்பத்தின் மரணத்திற்கு வருகிறாள். காரணம் அவள் ஜெயந்தி அறிந்தவைகளை , முன்னரே அறிந்தவள் . அதனாலே அவனை அவள் விட்டு விலகி சென்றாள், குறள் நெறி போல் இளைஞர்கள் வாழ வேண்டும் என்று சொல்லி. அவளுக்கு தெரியும் சம்பத் அவன் வாழ்வு முழுதும் தன்னை போல் ஒரு பெண்ணை தேடி அலைவான் என்று. அதனாலே அவன் அவளிடத்தில் மட்டும் கடிதம் எழுதுகிறான். 

     உறுபசி வாழ்க்கையில் மனிதர்கள் ஒருவரை பற்றி இன்னொருவர் கொண்டுள்ள மதிப்புகளின் உண்மையை , ஒரே ஒரு மனிதனை பற்றி வெவ்வேறு கோணங்கள் கொண்டுள்ள ஐந்து  நபர்களின் பார்வையில் சொல்லி . சொல்பவர்களின் மதிப்பை நமக்கு ஆடி போல் காட்டுகிறது. எப்போதும் மனிதன் பிறரை கொண்டே தன்னை மதிப்பிடுகிறான். 

                                                                                        -------------------சரவணன் 


திங்கள், 3 ஜூலை, 2017

கல் சூரியன்




நேற்று வரை நான் நடந்த பாதையில் ,
ஒரு சிறிய  உருளை கல் உருண்டு குறுக்கே கிடக்கிறது.
சப்பாத்துகளினால் உதைபட்டு எம்பி விழும் போது
கண்களை மொத்தமாக இழுத்து கொண்டு விழுகிறது.
கல் சிதறல்களில் அந்த ஒற்றை உருளை மட்டும்
சற்று பெரிது போல் வீங்கி தெரிகிறது.
இப்போது மிக கவனமாக அதன் பரப்பில்
கால் கொண்டு வீச
ஒரு பெரிய கால்பந்தாய் மாறி தட்டையாய் உருண்டோடுகிறது.
நின்றுவிட்ட அதை நோக்கி வேகமாய் ஓடிவந்து
காலை பின்னுக்கிழுத்து ஓங்கி உதைக்க
சப்பாத்துகள் மேல் உஷ்னம் பரப்பி
ஒரு நெருப்புகோளமாய் மாறி வானில் ஏறி அமர்ந்துவிட்டது.
சப்பாத்து முனையில் வாகாக வந்து விழத்தான் செய்கிறது,
எல்லார் பயணத்திலும் ஒரு சிறு கல்
எல்லோரும் உதைப்பதில்லை,
தாண்டி செல்லும்போது , சிறுகல்லொன்று பாறையாய்
நகரா பொருளாய் காலத்தை விழுங்கி நிற்கிறது.
                       -                                                                      
                                                                                  ----------பாரதிசரண் 

செவ்வாய், 13 ஜூன், 2017

நின்று போகும் கடிகாரம்...



நொடிகளை நூறாக பகுத்து அந்த நேரத்திற்குள் விரைய வேண்டியுள்ளது,
இந்த தட்கல் டிக்கெட்டை  பதிவு செய்ய.
நாளைக்கான இன்றை சுமந்து அலையை துவங்கியது மனது.
பயண நாளின் அதிகாலை , தாமதமாகும் தினசரியில் துவங்குகிறது.
உள்ளுக்குள் ஒரு டிக் டிக் ஓடிக்கொண்டே இருக்கிறது.
தட்டச்சு செய்து கொண்டே இருக்கின்றன விரல்கள்,
சப்தத்தில் தட தடவென ரயில் ஓடுகிறது..
கடைசி மின்னஞ்சலுக்கு பதிலளிக்கும் போது,
கடந்து போயிருந்தன நான் பிடிக்க வேண்டிய பேரூந்து.
இன்று மட்டும் பச்சை ஒளிர ஓடி கொண்டே இருக்கின்றன
எல்லா வாகனங்களும்.
முதுகுப்பையோடு ஆட்டோவில் ஏறி ரயிலடி செல்ல
மொத்த நகரமும் எனக்கு முன்னால் ஓடிகொண்டிருக்கிறது.
விபத்து, பேரணியை வேடிக்கை பார்க்கும் எனக்கு
சிறார்கள் சாலையை கடப்பதில் பொறுமையில்லை.
எல்லா அவசரங்களிலும் உணவுப்பொட்டலம் வாங்க தவறியதில்லை.
சிமெண்ட் படிகளில் விரைந்து ஏறி வேகமாய் கீழிறங்கும் போது
அந்த உலோக பாம்பு எனக்கு வால் காட்டியபடி
ஊர்ந்து சென்று கொண்டிருந்தது.
நடைமேடை பெஞ்சில் அமர்ந்து மூச்சு வாங்கியபோது
உடலிலில் இருந்த கடிகாரங்கள் எல்லாம்
மொத்தமாய் நின்று போயிருந்தன.
இனி எதன் பின்னாலும் ஓட  வேண்டியதில்லை,
எனவே நிதானமாய் தொடங்கலாம் இந்த பயணத்தை
கொஞ்சம் காற்று வாங்கிவிட்டு.

                            ----------------------பாரதிசரண்

திங்கள், 12 ஜூன், 2017

முறுகிய வெயில்

முறுகிய வெயில்

கிளம்பும்போது சரியாய் மணி 11
கிழக்கிலிருந்து மேற்கே செல்ல வேண்டும் கலெக்டர் அலுவலகத்திற்கு..
தொடை வழி பிருஷ்டம் ஏறி முதுகு வரை வந்திருந்தது வெயில்.
எங்கிருந்து கிளம்பினாலும் 12மணிக்கு வந்துசேரும்படி அமைந்திருக்கிறது
இந்த அலுவலகம்.
வியர்வை வழிய, கிளை நிறைக்கும் காக்கை போல்
மரத்தடிகளில் பெருங்கூட்டம்.
சூரியன் உச்சி  வரும்போது உள்ளே சென்றால்
அந்த பிரித்தானிய கால கட்டிடத்தின்
சுவர் சுதையிலிருந்து நூற்றாண்டு வெல்லம்   உருகி வழியும்
எல்லா சில்லறை வேலைகளையும் முடித்து
அதிகாரி கையெழுத்தோடு  வெளிவரும்போது
பொத்தல் விழுந்த பனை மர உத்திரத்திலிருந்து
செம்மண் கரையான் கூடு செல்லரித்து உதிரும்
வெளியே கதிர்கள் சரிய தொடங்கியிருக்கும்.
கிளம்ப போகும் நேரத்தில்
ஜூஸ் கடைக்காரனிடம் ஒதுங்கியிருக்கும்
எல்லோர் கோப்பையிலும்
முறுகிய வெயிலதன் வெப்பத்தை
விளிம்புகளில் நிறைந்திருக்கும்..

                    பாரதிசரண்

வியாழன், 11 மே, 2017

கவிதை நேரம்





ஒரு அழகான கவிதை எழுதி வெகு நாட்கள் ஆகிவிட்டது..
எல்லா சந்தர்ப்பங்களையும் கவிதையாக்க முயன்று கொண்டிருந்தது மனது
காலம்  அவள் இல்லா சந்தர்ப்பம் ஒன்றை நிறுத்தி விட்டு செல்லும் வரை....
அதன் பின் மொழிகள் எல்லாம் கவிதையாக்கி விட துடித்தது மனது..
கணம் நிறைத்த வரிகளுக்குள் வாழ்வை கண்டடைந்தது  வரை...
சிறந்த தருணத்தை ஒரு வாழ்வனுபவமாக மாற்ற காத்து கொண்டிருக்கும் பொழுதெல்லாம்..
சட்டென சிறகு உதிர்த்து பறந்து செல்கிறது நீலவானுக்குள் ஓர் ஒற்றை காகம் ...
                                                     
                                                                                                       -------பாரதிசரண் 

வெள்ளி, 7 ஏப்ரல், 2017

தருண் விஜயும், நிறவெறியும்


நேற்றைய தருண் விஜய் அவர்களின் கருத்திற்கு இணைய உலகம் கடுமையான எதிர்ப்பை தெரிவித்ததோடு மட்டுமல்லாமல், காசு வெட்டி போட்டு தேசத்தை இரண்டாக பிரித்து விடலாம் என்று வரை கொதித்து உள்ளார்கள்.
நிற வெறி என்பது என்ன என்ற அடிப்படை புரிதல் இல்லாத மக்கள் ஆக நாம் இருக்கிறோம். ஒரு தேசத்தில் வெள்ளை, கருப்பு நிறம் கொண்ட மக்கள் , அழகின் அடையாளமாய் வெள்ளையை முன்னிறுத்தி கருப்பு நிற மக்களை ஒதுக்கி வைப்பது தான் நிற வெறி. அமெரிக்கா , தென்னாபிரிக்கா போன்ற நாடுகளில் இதை தான் செய்கிறது. நிறத்தின் பேரால் ஒதுக்கீடு தரப்படுவது வரை அதன் வீச்சு செல்கிறது. .
ஆனால் திரவிட இனத்தின் உண்மையான நிறமே கருப்பு என்று வசனம் பேசும் நாம். நம்மை நோக்கி யாராவது நீங்கள் கருப்பு என்று சொல்லிவிட்டால், ஒருவித அவமானம் கொண்டு அவர்களை நோக்கி கூச்சலிட துவங்குகிறோம். இதற்க்கு காரணம் இன்னும் நம் ஆழ்மனதில் கருப்பின் மேல் நீடிக்கும் வெறுப்பு, அதை துக்கத்தின் நிறமாக , அமங்களத்தின் நிறமாக வைத்திருப்பதே. வெள்ளை நிறத்தின் மேல் தனியா மோகம் எல்லோர் மனதிலும் இருக்கிறது. அதனால் தான் இன்னும் நம் சமூகத்தில் கருப்பு நிற பெண்களை முதிர்கன்னிகளாக ஆக்கி கொண்டு இருக்கிறோம்.
"நாங்கள் நிறவெறியர்கள் ஆக இருந்திருந்தால் தென் இந்தியாவின் கருப்பு வண்ண மக்களோடு எப்படி வாழ்ந்து கொண்டிருப்போம்" இது தான் அவர் சொன்ன வரிகள். இதில் எது நம்மை அவமானப்படுத்தி விட்டது என்று தெரியவில்லை, நாம் கருப்பு நிறம் கொண்டவர்கள் தான் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை, அந்த வண்ணத்தை முன்னிறுத்தி யாரும் என்னை சிறுமை செய்து விடமுடியாது காரணம் நிறம் என்னை எந்த ஒரு தரவரிசைக்குள்ளும் நிலைநிறுத்த செய்யவில்லை. வெள்ளை போன்றே கருப்பும் ஒரு வண்ணம் தான்.
நிற வெறி இல்லாத மக்கள் நாங்கள் என சொல்வதற்க்காகவே அவர் அந்த வார்த்தைகளை பயன்படுத்தியிருப்பர் என்று என்னால் ஏற்று கொள்ள முடிகிறது. காரணம் 3 வருடங்களுக்கு மேல் வட இந்தியாவில் இருக்கும் எனக்கு , இவர்கள் நிறம் வழியே ஒரு ஏற்றத்தாழ்வை முன்னிறுத்த மாட்டார்கள் என அனுபவரீதியாக நான் உணர்ந்தவன்.
மேலும் இந்தியாவில் ஏற்றத்தாழ்வு பார்க்க சாதி, மத, இன , மொழி என்று இத்தனை வேறுபாடுகள் இருக்கும்போது புதிதாக நிறம் வேறு வேண்டுமா என்று எல்லோரும் நினைத்ததனால் அதன் மேல் பெரிய ஈர்ப்பு இல்லாமல் போய்விட்டது என நினைக்கிறேன்.
------------------சரவணன்

ஞாயிறு, 19 மார்ச், 2017

ஐந்து மாநில தேர்தலும் , தேசிய அரசியலும்




  இந்திய அரசியல் களம் நடந்து முடிந்த 5 மாநில தேர்தல் முடிவுகளுக்கு பின் போட்டியாளர் இல்லாத ஒற்றைப்படை தன்மை கொண்ட ஒரு தலைவரை உருவாக்கி விட்டிருக்கிறது. உ பி இல் பா.ஜ.க வின் மிக பெரிய  வெற்றி மோடியின் வளர்ச்சி பிம்பம் இன்னும் குறைந்துவிடவில்லை என்பதை உறுதிப்படுத்துகிறது. 

          ரெண்டு ஆண்டுகளுக்கு முன் நடந்த டெல்லி   தேர்தல் தோல்வி என்பது அறிவார்ந்த மக்களின் எதிர்பார்ப்பு மற்றும் 15 ஆண்டு கால காங்கிரஸ் ஆட்சியின் அதிருப்தியால் நிகழ்ந்தது. பீகார் தேர்தல் தோல்வி  இரண்டு முரண்பட்ட  எதிர் கட்சிகள் இணைந்து உருவாக்கிய கூட்டணி மூலம் கிடைத்தது. ஆனால் உத்திரபிரதேச தேர்தல் களம் என்பது பெரும்பான்மை இந்திய மக்களின் மனநிலையை பிரதிபலிக்க கூடியது , நாட்டின் மிகப்பெரிய வாக்காளர்களை கொண்ட மாநிலம் அதை வெற்றி அடைந்திருப்பதன் மூலம் பா.ஜ.க தனது அரசியல் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்தியதோடு  மட்டுமல்லாமல், ஆட்சி நிர்வாகத்திலும் தேசிய அளவில் தனிபெரும்பான்மை கொண்ட கட்சியாக வளர்ச்சியடைந்துள்ளது.

                      சமாஜ்வாடி , பகுஜன் சமாஜ்வாடி , காங்கிரஸ் என்ற மூன்று பெரும் கட்சிகளை பின்னுக்கு தள்ளி , உற்றகாண்டில்  காங்கிரெஸ்ஸை வீழ்த்தி , கோவா வில் மீண்டும் ஆட்சியை தக்கவைத்து , வடகிழக்கில் நேரடியாக ஆட்சியில் அமர ஆயத்தமாகி மாநில  அளவிலும் , தேசிய அளவிலும் தனி பெரும் சக்தியாக உருவெடுத்துருக்கிறது. பஞ்சாபின் தோல்வி என்பது அகாலிதளம் அடைந்த தோல்வி மட்டுமே , அங்கே போதை பொருளால் மாநிலமே அழிந்து கொண்டிருப்பதை வேடிக்கை பார்த்ததால் மக்கள் வெறுப்பு அலையால் ஆட்சி காங்கிரஸ் வசம் சென்றுள்ளது . அரவிந்த் கெஜ்ரிவாலின் பதவி ஆசையால் ஆம் ஆத்மி தனது அடுத்த கட்ட நகர்வில் சற்று பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளது. எனினும் எதிர்க்கட்சி வரிசையில் இடம் பெற்றிருப்பது அதன் வளர்ச்சியே.

         காங்கிரஸ் ஒட்டு மொத்தமாக அதன் நம்பிக்கையை மக்களிடத்தில் இழந்து வருகிறது.அதன் தேசிய தலைமை மிக பெரிய மாற்றத்திற்கு உட்படாத வரை , மோடிக்கு எதிரான போட்டியாளரை அவர்களால் நிறுவ முடியாது . ராகுலால் சிறந்த மாற்று தலைவராக  பிரகாசிக்க முடியவில்லை என்பதை எல்லா தேர்தல்களும் தெளிவாக உணர்த்திவிட்டது . நேரு குடும்பத்திலிருந்த இன்னும் தலைமைக்கு ஆட்களை  எதிர்பார்த்து கொண்டிருப்பது கட்சியின் இறுதிக்காலத்தை அவர்களே உருவாக்கி விடுவதர்கு சமம்.

               எதற்க்காக காங்கிரஸ் இதை செய்ய வேண்டுமெனில், மொத்த தேசமெங்கும் போட்டி இல்லாத ஒற்றை தலைமை உருவாவது அரசியல் களத்தை எளிதாக்குவதோடு மட்டுமல்லாமல் , கேள்வி எழுப்ப முடியாத எதிர்தரப்பை  உருவாக்கி விடும். எனவே காங்கிரஸ் தனது உள்கட்டமைப்பை வலுப்படுத்துவதோடு, மாநில தலைமைக்கான முக்கியத்துவத்தை உணர்ந்து செயல்பட வேண்டும்.  ஒரே கட்சி தேசிய அளவிலும் , மாநில அளவிலும் அடையும் பெரு வளர்ச்சியானது , பிராந்திய கட்சிகளுக்கு பின்னடைவு ஏற்படுத்தி  , தேசத்தின் பன்முகத்தன்மையை நீர்த்து போக செய்து ஒற்றைப்படுத்தலுக்கு வழிவகுக்கும்.அவர்கள் மதத்தையும் மொழியையும் கொண்டு இதை எளிதாக நிகழ்த்தி விடுவார்கள்.

                    நீங்கள் பின்பற்றும் மதம் தான் உங்களை உங்கள்  அரசியல் தலைமையை நிர்ணயிக்க செய்யும் எனில் , கூடிய விரைவில் நீங்கள் உங்கள் இன , மொழி அடையாளங்களை இழக்க நேரிடும். கடந்த 50 ஆண்டு தேசிய அரசியல் களத்தின் மிக பெரிய சவால் இந்த பன்மொழி அரசியல் தான், ஆனால் தற்போது தென் மாநிலங்கள் 4, வடகிழக்கு மாநிலங்கள் 8 தவிர மற்ற அணைத்து மாநிலங்களும் இந்தி மொழி என்ற ஒற்றை அடையாளத்தின் கீழ் கட்டமைக்கப்பட்டுள்ளது. இனி இவர்கள் இந்த பொது தன்மையை தேசம் முழுதும் விரிக்க செய்வார்கள் , அதற்கு கீழ் வராத மாநிலங்கள் முற்றிலுமாக ஒதுக்கப்பட்டு அதன் வளர்ச்சியின் மீது அதிகாரத்தின் பேரில் கட்டுபாடுகள் விதிக்கப்படும். தற்போது தமிழக்தில் நிகழ்வது இது தான் . தேசிய அரசியலில் தமிழகம் முற்றிலுமாக புறக்கணிக்கப்படுகிறது.
             
          தேசத்தின் வளர்ச்சி என்ற பெயரில் பா.ஜ .க வின் அரசியல் கொள்கைகள் மாநிலத்தின் மொழிபண்பாட்டு, கலாச்சார விழுமியங்களை புறக்கணித்துவிட்டு முன்னெடுக்கபடுமாயின் அதற்க்கான எதிர்வினைகள் இந்தியாவெங்கும் தாமரை மலரும் என்கிற உங்கள் நீண்ட கால கனவை சிதைக்கும் வகையில் ஒவ்வொரு மாநிலத்திலிருந்து உருவாகி வரும்.

           ஆனால்  தற்போது உள்ள அனைத்து பிராந்திய கட்சிகளும் எதோ ஒரு வகையில் பா.ஜ .க ஓடும் காங்கிரஸ் ஓடும் கூட்டணி அமைத்து கொண்டதன் வழி அதன் மாற்று முகத்தை இழந்து  விட்டது , எனினும் தற்போதைய சூழ்நிலையில்  அப்படி ஒரு மாற்று கட்சியாக ஆம் ஆத்மீயை தவிர வேறு எந்த கட்சியும் பிராந்திய அளவில் இல்லை என்பதே உண்மை.

    கட்டுரையாளர் : சரவணன்.S 
   தொடர்புக்கு : srisaran15@gmail.com