நொடிகளை நூறாக பகுத்து அந்த நேரத்திற்குள் விரைய வேண்டியுள்ளது,
இந்த தட்கல் டிக்கெட்டை பதிவு செய்ய.
நாளைக்கான இன்றை சுமந்து அலையை துவங்கியது மனது.
பயண நாளின் அதிகாலை , தாமதமாகும் தினசரியில் துவங்குகிறது.
உள்ளுக்குள் ஒரு டிக் டிக் ஓடிக்கொண்டே இருக்கிறது.
தட்டச்சு செய்து கொண்டே இருக்கின்றன விரல்கள்,
சப்தத்தில் தட தடவென ரயில் ஓடுகிறது..
கடைசி மின்னஞ்சலுக்கு பதிலளிக்கும் போது,
கடந்து போயிருந்தன நான் பிடிக்க வேண்டிய பேரூந்து.
இன்று மட்டும் பச்சை ஒளிர ஓடி கொண்டே இருக்கின்றன
எல்லா வாகனங்களும்.
முதுகுப்பையோடு ஆட்டோவில் ஏறி ரயிலடி செல்ல
மொத்த நகரமும் எனக்கு முன்னால் ஓடிகொண்டிருக்கிறது.
விபத்து, பேரணியை வேடிக்கை பார்க்கும் எனக்கு
சிறார்கள் சாலையை கடப்பதில் பொறுமையில்லை.
எல்லா அவசரங்களிலும் உணவுப்பொட்டலம் வாங்க தவறியதில்லை.
சிமெண்ட் படிகளில் விரைந்து ஏறி வேகமாய் கீழிறங்கும் போது
அந்த உலோக பாம்பு எனக்கு வால் காட்டியபடி
ஊர்ந்து சென்று கொண்டிருந்தது.
நடைமேடை பெஞ்சில் அமர்ந்து மூச்சு வாங்கியபோது
உடலிலில் இருந்த கடிகாரங்கள் எல்லாம்
மொத்தமாய் நின்று போயிருந்தன.
இனி எதன் பின்னாலும் ஓட வேண்டியதில்லை,
எனவே நிதானமாய் தொடங்கலாம் இந்த பயணத்தை
கொஞ்சம் காற்று வாங்கிவிட்டு.
----------------------பாரதிசரண்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக