சனி, 1 டிசம்பர், 2018

மந்திரம் கவிதைகள்

21ஆம் நூற்றாண்டின் சந்தர்ப்பவாதி
நான் ஒரு நாடோடி
என்னிடம் ஒரு மடிக்கணினி உண்டு.
இரண்டு தொடுதிரை கைபேசிகள்
ஒன்று அலுவலுக்கு.
மற்றது அந்தரங்கத்திற்கு.
8மணி நேரம் தண்டுவடம் மடித்து
பணம் பண்ணுகிறேன்
மீதி நேரங்களில் பயணம், உறக்கம், கலவி
ஆம் திருமணமாணவன் -கரணம்
நான் ஒரு 90களின் சிறுவன்.
ஒரு கையால் பம்பரம் விட்டுக்கொண்டே
இன்னொரு கையால் தற்படம் எடுத்து
நிலை தெரிவிக்கும் விநோதன்.
வாய்ப்புகளை நோக்கி ஓடும் பகடையாளன்
எப்போதும் விருத்தங்கள் வேண்டி
வாழ்வை உருட்டி கொண்டிருப்பவன்.
எங்கும் வேர் விடாமல் பார்த்துக்கொள்ளும்
ஒரு மணிபிளாண்ட் மனிதன்.
எனது இளமை நினைவுக்குள் ஒரு ஊர் சுமப்பவன்
என் மகனின் நினைவுகளோ
ஒரு அடுக்ககத்தின் பல நகரங்களை ஏற்றிருக்கும்.
சந்தர்ப்பவாதத்தின் தத்துவம் கொண்ட என் வாழ்வில்
என் அப்பா ஒரு வாகை மரத்தின் செம்பூக்களோடும்,
நான் ஒரு வேப்ப மரத்தின் மஞ்சள் பூக்களோடும்,
என் பிள்ளையோ வண்ணம் குழைந்த குரோட்டன்ஸ் இலையோடும்
பால்யத்தை பகிர்ந்து கொண்டிருப்போம்.
oOo
கீழ்மையின் ஒளி
அகாலமாய் நீள்கிறது நாட்கள்.
நான்கு சுவர் ஒரு கூரை
கைபேசி திரைஒளியில் ஒளிர்கிறது இருளறை.
பெருவிரலின் அசைவுகளில்
தொடுதிரையில்
நுற்றுக்கணக்கானவர்களின் காலம்
உயிர் பெறுகிறது.
காலக்கோடு ஒரு தற்பெருமை அட்டவணை.
முகப்புத்தகத்தின்
இடுகைகளில்
மின்னும் விருப்பக்குறிகளில்
பொறாமையின்
இயலாமையின்
நுண்ணிய ரேகை பதிந்திருக்கிறது
கீச்சுகளின் கருத்துலகில்
உரையாடும் மறுமொழிகளில்
வக்கிரத்தின்
விரசத்தின்
ஆழ்மன முகமூடி
கள்ள புன்னகை பொதிந்திருக்கிறது.
தேடுபொறியின்
வலை வரலாற்றில்
அந்தரங்கங்களின் ரகசியங்கள்
வால் தீண்டும் நாகமென
தீரா காமத்தின் பின்னிரவுகளை
முடிவற்று சூழ்ந்திருக்கிறது.
அணையா இருண்மையின்
கீழ்உணர்ச்சிகள்
கரும் இரவின் போர்வையாக
எல்லா அறைகளிலும்
திரையிட்டிருக்கிறது.
ஆதி மிருகத்தின் உயிர்விசையை
அத்திரையொளி
தனித்த சுடர் போல்
நகரின் எல்லா மனிதருக்குள்ளும்
ஒளிர செய்து கொண்டிருக்கிறது
                                                              ---------------------மந்திரம்

செவ்வாய், 23 அக்டோபர், 2018

பேய் உலகம்

இருட்டு அறைகளில்
கவிந்து கிடக்கிறது அச்சம்.
அநாதரவான தனிமையில்
உயிர்பெறுகிறது
அமானுஷ்யம்.
சிறு ஒலிதுணுக்கில்
பேரமைதி அதிர்கிறது.
நினைவின் அடுக்கில்
பேய்கதைகள்
மேலுழுகிறது.
உள்ளறைகளில்
என்னை தவிர
இன்னொன்று நிறைகிறது.
இப்போது திரும்பி
பார்க்க முடிவதில்லை.
பின்புறம் குளிர்ச்சி பரவுகிறது.
தோள்களில் வியர்வை
துளிர்க்கிறது.
சட்டென வெளிச்சம் மீள்கிறது.
இனி இருளுக்கென ஒரு
உலகம் இவ்வீட்டில்
பிறந்துவிட்டது.

                 --------------------------------பாரதிசரண் 

வெள்ளி, 12 அக்டோபர், 2018

ஆடியுலகு









ஒரு பூதக்கண்ணாடி கிடைக்கும்
பொழுது
சுருங்கிவிடுகிறது உலகம்.
நுண்ணியவைகளை
கூர்ந்து நோக்கி
ஆடியின் வழி
உருப்பெருக்கு அடைகிறது
அளவுகளின் புறஉலகு.
ஈயின் இறகுகளில்
காக  உடல்நிறைகிறது.
தாத்தா செடியின் கொண்டையில்
சூரியகாந்தி இதழ் விரிகிறது
கச்சிதமான கற்பனைகள்
மாயத்தோற்றத்தில்
பருப்பெறுகிறது.
மாயஉருவங்களாய் நாமும்
யாரோ ஒருவரின்
பூதக்கண்ணாடியின் பின்புறத்தில்.

                                 
                                                         -------------பாரதிசரண் 

புதன், 10 அக்டோபர், 2018

#96 - #காதலின் #உரையாடல்

              தாழ்ப்பாளிட்ட கதவும், சாவியுமாய் இருவரின் உறவை எவ்வித அலங்காரமும் இல்லாமல் திரை மொழிக்கு கடத்தியிருக்கிறார்கள்.ஒரு அரசுப்பள்ளியின் காதலை தங்கர்பச்சானும், சேரனும் காட்சிப்படுத்திய போதும்,தனியார்பள்ளியின் உயர்த்தனமான காதலை கவுதம் மேனன் காட்சிப்படுத்திய போதும். அரசுஉதவிபெறும் பள்ளிகளை யார் கையில் எடுப்பார்கள் என்று காத்திருந்ததற்கு, காலை பள்ளியின் சூரிய வெளிச்சம் போல் மரங்களின் வழி கவிதையாய் ஒளிர்கிறது இப்படம்.
                      வாழ்வில் கள்ளம் கபடம் ஏறாத பால்யம் போல் தூய்மையான அன்பு எங்குமே இல்லை. அதனுள் கூட்டுப்புழுவிலிருந்து சிறகு முளைக்கும் வண்ணத்து பூச்சி போல் ஒரு காதல் முளைக்கிறது. இவ்வளவு நெருக்கமாய் ஒரு அன்பு நமக்கும் வாய்த்திருக்கதா என்றும், வாய்த்திருந்தவர்கள் மீண்டும் அந்த அன்பை நோக்கி ஏங்கும் முகமாய் திரையரங்கம் முழுதும் நினைவுகளின் அமைதி வழிந்து கொண்டிருந்தது.
                       ஒரு பயண புகைப்படக்காரனின் நாட்களை, இந்தியாவின் நிலவெளிகளில் அலைந்து காலங்களும் , நிலங்களுமாய் விரியும் பாடலில் இருந்து துவங்குகிறது திரைப்படம். ராமின் இயல்பையும், படத்தின் தன்மையையும் விவரித்து செல்வது போல் ,நீருக்குள் செல்லும் கல்லாகவும், நிலத்தில் தரையிறங்கும் இறகாகவும் குறிப்புணர்த்தி நம்மை சற்று உடல் தளர்த்தி அமர செய்கிறது இப்பாடல்.
                  10ம் வகுப்பு படிக்கும் போது ஒரு காதல், 22 வருட பிரிவுக்கு பின் நண்பர்கள் கூடுகையில் இருவரும் மீண்டும் சந்தித்து கொள்கிறார்கள். காலம் ஒரு புகைப்படத்தருணம் போல் அந்த நாட்களுக்கு சென்று அங்கிருந்து அவர்களின் உரையாடல் வழி அந்த 22 வருடங்களிலும் அவர்கள் காதல் எப்படி பயணித்து வந்தது என்பதை.உரையாடல்கள் மூலம் ரசிகனுக்கு கடத்தியிருக்கிறார்கள். நீங்கள் வாழ்வென நேசித்த ஒருவரை, இத்தனை வருட பிரிவிற்கு பிறகு சந்தித்தால் என்ன நிகழுமோ அதை இசையாகவும்,காட்சிகளாகவும், வசனங்களாகவும்
தனித்த இரவின் நீண்ட நடையை போல் மென்மையாக கடத்துகிறார்கள்.
            இரைச்சல்கள் இல்லா ஒரு படம் தரும் அனுபவம் என்பது, ஒரு நாவலின் ஆழ்ந்த மௌன வாசிப்பை போல் நிறைவாய், பக்கங்களை முடித்து வைத்து எழுத்து செல்வதை போல் எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல் முடிந்துவிடும்.அந்த கலை அனுபவத்தை மொத்த படக்குழுவும் அர்ப்பணிப்போடு வழங்கியிருக்கிறார்கள்.
          இந்த வரிகள் ஒரு முன்குறிப்பை போல உங்களை இந்த திரைப்படத்திற்கு அழைத்து செல்லட்டும்.
#காதலே காதலே தனிப்பெருந்துணையே..
#கூடவா ..கூடவா.. போதும் ..போதும் .
                                                                                           
                                                                                                    ---------------------பாரதிசரண்

வியாழன், 4 அக்டோபர், 2018

பகிரி காதல்




தொடர்பற்றவைகளை ஒழுங்கு செய்கிறது
கைபேசியின் பகிரி உரையாடல்கள்,

உன் முகம் நோக்காமல்
ஆத்திரத்தின் முகவடிவங்களை
கனலோடு பகிர்ந்து  விவாதம் ஒரு வாரம்.

சிறு சிறு குறுங்கவிதை
திரையின் இரு ஓரங்களிலும்
ஒலித்துணுக்குகளாய் மின்னிய ஒரு வாரம்.

தன்னேற்பு படங்களில்
உன்னை ரசித்து
தூரங்களின் பிரிவை ஆற்றுப்படுத்திய ஒரு வாரம்.

தாபங்கள்  அலையாட
அந்தரங்களின் குறுகுறுப்பை மொழி கொண்டு
கூடி களித்து உயிர் ஏற்றிய ஒரு வாரம்.

சென்னையில் நீ, டெல்லியில் நான்
புதுயுகத்தின் தொழிநுட்ப காதலர்கள் நாம்
இந்நூற்றாண்டில் காதல் கருவிகளில் நினைவேர்க்கிறது .


                                                                     -----------------பாரதிசரண் 

புதன், 5 செப்டம்பர், 2018

துயரத்தின் மணம்

எங்கிருந்து எழுகிறது துயரத்தின் மணம்
வாய்ப்புகள் மறுத்து திரும்பும் கால் மறைக்கும் காலுறையில்
புழங்கும் வியர்வை
கையறு நிலையின் கைகளில் புகைந்து கருகும்
சிகரெட் கனல்
பசி வயிறை  உண்டு செரித்து பின், மீந்து போன சோற்று பொட்டலத்தில்
 காத்திருக்கும் ஊசிய உணவு
எல்லா ஏமாற்றத்தின் அலைச்சலுக்கும்  , தாகம் தணிக்க
மீதமிருக்கும் கடைசி கோப்பை மதுவின்
புளித்த வாடை.
கடற்கரையின் மணலில் எண்ணங்களற்று
வெறுமையாய் அமர்ந்திருக்கும்போது
பழிதீர்க்கும் கொலைவாலின் நுனியிலிருந்து
பொங்கி அலைபாயும் செவ்வாழியிலிருந்து
கவிந்து வருகிறது துயரத்தின் குருதி மணம்..

                                       ------------------------பாரதிசரண்

வெள்ளி, 31 ஆகஸ்ட், 2018

உயிர்ப்பு




நெடுஞசாலையின் பிரம்மாண்டத்திலிருந்து
 விலகி செல்லும் சிறு சாலை ,

விசும்பு கருமையை போர்த்தியிருக்கிறது
மேகத்தின் பொதி நுனிகளில் முட்டியபடி தவழ
பசும்நீலமாய் நீண்டு விரிகிறது பொதிகை
கை நீட்டி அணைக்க காத்திருக்கும் அன்னை என,

பெருவெளியின் காற்றை கீறி செல்லும்
பேரூந்து பயணம்-  ஆனை நடையை போல்,
மலை நெருங்கி வந்து மடி ஏற அழைக்கிறது

பெருஞ்சத்தம் ஏதுமில்லா சிறு நகரின் அங்காடி வீதியில்
சிறு தூறலின் ஈர இடைவெளியில்
தடம் மாற்றி, மீண்டும் ஒரு பயணம்.
  
அன்னை மடி தவழும் குழந்தை என
மலையின் அடிவாரத்தில் நத்தை போல் ஊர்கிறது
வலப்புறம்  மருதமும்,
இடப்புறம் முல்லையும்,
நெருங்க நெருங்க குறிஞ்சியாய்
காண்பவை பசுமையாய்
முளைத்து வருகிறது ஊர்.

அன்று பெய்த மலை மழையில்
சுழித்து ஓடுகிறது காட்டாற்று வெள்ளம்,
கடக்கும் போது பொங்கி வருகிறது மண் மனம்.

அகண்ட இலை கொண்ட வாதாம் மரத்தடியில்
இறங்கி மழை கம்பிகளுக்குள் நடந்து செல்கிறேன்

சன்னதி தெருவில்
கரும்மலைகளின் பின்னணியில் ஒற்றை கோபுரம்.
முடிவற்ற  ஆழத்திற்குள் கருமை போர்த்தி
ஒற்றை தீபத்தின் ஒளியில்
கருவறையில் சயனித்து
புடவியில் அனைவருக்குள்ளும் நிறைந்திருக்கிறார்
தேவாதி தேவன்

மாட வீதிகளில் ஒவ்வொருநாளும்
சுற்றி எதிரொலிக்கிறது
அவனை தினமும் தொழுதேத்தும்
கரும்பிடியின் கழுத்து மணியோசை,

கூதல் நிறைக்கும் அவ்வந்தியில்
மாடவீதியின் ஓர்அகத்தில்
நெடும் பனை உத்திர கொக்கியில்
வெண்பருத்தி ஆடையில்
வெளிச்சம் மங்கிய அறையில்
ஒளியே முகமாய்
ஒருவன் உறங்குகிறான்.

நானும் , என் அண்ணனும் ,என் தந்தையும்
என் முந்திய தலைமுறைகளும் உணர்ந்த
அந்த இயற்கையின் தணுமையை
இந்த பிஞ்சு உடலெங்கும்
விரவிச்செல்வதை
தொட்டில் விரித்து
விழிவிரிய காண்கிறேன்
என் உயிரின் விதை....!

                   ----------பாரதிசரண்

வெள்ளி, 2 பிப்ரவரி, 2018

இந்திய பெருங்கடலில் திரும்பும் அரசியல்

                                    
                    பாதுகாப்பு உள்கட்டமைப்பில் வளர்ச்சி , நிர்வாகம் மற்றும் செயல்பாடு என்ற வகையில் , கடந்த வாரம் இந்திய பெருங்கடல் தீவுகள் நாடான சீஷெல்ஸ் உடன்  திருத்தப்பட்ட ஒப்பந்தம் ஆனது விரைவில் விடைபெறும் இந்திய வெளியுறவு செயலர் ஜெய்ஷ்ங்கர் மூலம்  கையெழுத்தானது. அப்போது அவர் குறிப்பிட்ட  "கரையோர நாடுகளுக்கான பாதுகாப்பு காவலனாக இந்தியாவின் வளர்ச்சி,சாத்தியங்களும் சவால்களும் நிறைந்ததாக இருக்கும் "என்பதாகும்.

               இந்தியபெருங்கடலில் இந்தியா முன்னெடுக்கும் பெரும் பொறுப்புகளுக்கு முன், கடந்த காலங்களில ராணுவ சக்தியாக நிலைபெறுவதற்கு ஏற்பட்ட முயற்சிகளின் ஊடான  சிரமங்களிலிருந்து கற்று கொண்ட  பாடங்களை கவனிப்பது மிகவும் அவசியமானது. 19ஆம் நூற்றாண்டு  மற்றும் 20 ஆம் நூற்றாண்டின் துவக்கத்தின்  பெரும் அரசியல் விளையாட்டுகளில், இந்திய ஆங்கில அரசு இந்திய பெருங்கடல் பகுதியில் மூலோபாய சக்தியாக நிலைநிற்க  தொடர்ந்து ஐரோப்பிய சக்திகளுடன் போட்டியை தவிர்க்க வேண்டியதாக இருந்தது.

                  ஆங்கிலேய அரசு மேலும், இந்திய பெருங்கடல் தீவுகளில் உள்ள முக்கியமான இடங்களுக்கும் , சிக்கலான பகுதிகளுக்கும் தங்களது சுய அனுகளுக்காக இந்திய பெருங்கடலிலிருந்து நுழைவதற்கும் , வெளியேறவும் அப்பகுதிகளில் உள்ள உள் கொந்தளிப்புகள் மற்றும் சக  போட்டியாளர்களின் ஆதிக்கமுறைகள் எதுவும் அச்சுறுத்துவதாக அமையாது என்று உறுதி அளிக்க வேண்டியிருந்தது.இதை செய்வதற்க்கான சுமை " அரசியல்வாதிகள் " என்று அழைக்கப்படுபவர்களின் தோள்களின் மேல் ஏற்றிவைக்கப்பட வேண்டியிருந்தது

                    இவர்கள் ஆங்கில அரசால்  " புகழ் பெற்ற அரசு துறை அதிகாரிகள் " என்று குறிப்பிடப்பட்டார்கள். இவர்கள் தான் தற்போதைய வெளியுறவு அலுவலக அதிகாரிகளுக்கு முன்னோடிகள். இவர்களுக்கு வழங்கப்பட்ட வேலையானது , எல்லைகளுக்கு அப்பாற்பட்டு பேரரசுகளுடனும் கான் அரசுகளுடனும் சிறப்பு அரசியல் ரீதியான உறவுகளுக்கும் மற்றும் ராணுவ ரீதியான உறவுகளுக்கும் பேச்சுவார்த்தை நடத்தி பூகோளம் சார்ந்த அரசியல் மாற்றத்தை ஆங்கில அரசுக்கு சாதகமாக திசைதிருப்புவது என்பதே.
 
                           1947ல் கிடைத்த சுதந்திரம், இந்திய ராஜதந்திரசெயல்பாடுகளில் விசித்திரமான விலக்கத்தை உருவாக்கியது. இந்திய வெளியுறவு துறை என தற்போது கூறப்படும் ராஜதந்திர உறுப்புகள் ஆங்கில அரசால் உருவாகி வந்த யதார்த்த அரசியல்நிலைப்பாட்டிற்கும் நேருவால் அமைக்கப்பெற்ற தார்மீக அரசியல் நிலைப்பாட்டிற்கும் இடையே அறுபட நேர்ந்தது. அண்டை நாடுகளுக்கு இடையில், சுதந்திர இந்தியா ஒரு முக்கிய சக்தியின் சுமையை பற்றி கூறினாலும் ,உலக அரங்கில், தில்லி தனது  நெறிகள் மற்றும் மதிப்புகளின் அடிப்படையில்  சாம்பியன் போல்  ஆனது.
                      இந்திய பெருங்கடல், எதிர்பாராதவிதமாக யதார்த்த அரசியல் நிலையிலிருந்து தார்மீக அரசியல் நிலைக்கு மாறும் சூழல் வந்தது. கிழக்கு சூயஸ்இலிருந்து இங்கிலாந்து தன் அதிகாரத்தை திரும்ப பெறும் சமயத்தில், இந்தியா அதனை சுற்றியுள்ள  கரையோர பகுதிகளில் உருவாக இருந்த "அதிகார வெற்றிடம்" என்ற நிலையை  முற்றிலுமாக தவிர்த்தது.மேலும் அது அமெரிக்காவும் , ரஷ்யாவும் இந்திய பெருங்கடலில் தங்கள்  ராணுவ உறுப்புகளை முடுக்குவதற்கு செய்த முயற்சிகளை எதிர்த்தது. அதனுடன் இந்திய பெருங்கடலை " சமாதான மண்டலமாக " அறிவிக்க அழைத்தது. மேலும் அக்காலகட்டத்தில் இந்தியா சுய நம்பிக்கை  மற்றும் அணி சேரா நாடு என்ற பெயரில்  பொருளாதாரத்திலும் , உத்திகளிலும் தன்னை தானே மற்ற அணிகளிலிருந்து  துண்டித்து கொண்டது.

                     இந்திய பெருங்கடலின் அரசியல் தளத்தில்  டெல்லியின் சமாதான பார்வை யதார்த்தத்தை ஒப்பிடும்போது உயிர்ப்பித்திருக்க முடியவில்லை. பிராந்திய முரண்பாடுகள் மற்றும் பெரும் வல்லரசு போட்டியிடல், கரையோர  நாடுகள் தங்களின்  பிராந்தியங்களில்  இராணுவ தளங்களை திறந்து வைக்க செய்தன.பனிப்போரின்  முடிவானது பெரும் வல்லரசு பதட்டங்களை எளிதாக்கினாலும் , வெளிநாட்டு இராணுவ தளங்கள் மறைந்துவிடவில்லை.



                      இந்திய பெருங்கடல் மூலோபாய முக்கியத்துவம் பெறும்போது , கரையோர பிராந்தியங்களின் தளங்களில் பெரும் அதிகார விருப்பமும், ராணுவ வசதிகளும் புதுப்பிக்கப்படுகிறது .ரஷ்யாவும் , பிரான்ஸும் முறையாக சிரியா மற்றும் அபுதாபியில் தங்கள் ராணுவ தளங்களை கைப்பற்றிவிட்டனர் அமெரிக்க ராணுவமும் டீகோ க்ராஸியாவில் தளத்தை சிறப்பாக  உருவாக்கிவிட்டனர்.

              தற்போதைய நிலையில் இந்தியாவும் , சீனாவும் தளங்களை , வசதிகளை கைப்பற்றி  கொள்வது என்பதே புதியது.வலிமையான எதிரிகள் என்று கருதப்படுபவர்களின் வெளிநாட்டு ராணுவ தளங்கள் ஆசியாவிலும் , இந்திய பெருங்கடல் பகுதிகளிலும் உருவாகியிருப்பது, பெய்ஜிங்கியையும், டெல்லியையும் எல்லை தாண்டிய பாதுகாப்பு விருப்பங்களுக்காக அத்தகைய அமைப்புகளை உருவாக்குவதற்க்கான  பார்வையை நோக்கி திருப்பியுள்ளது. சீனா தனது முதல் ராணுவ தளத்தை ஜிபூட்டியில்  அமைத்துவிட்டது. இனிவரும் காலங்களில் இந்த எண்ணிக்கை அதிகரிக்கவே வாய்ப்புகள் அதிகம்.

            கடந்த 2015 ஆம் ஆண்டு இந்திய பிரதமர்  இந்திய பெருங்கடல் தீவுகள் நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்தபோது, இந்திய பெருங்கடல் பாதுகாப்பிற்க்கான இந்தியாவின் பங்கை உறுதிப்படுத்தினார். இந்த புதிய அணுகுமுறையின் ஒரு பகுதியாக, சீஷெல்ஸ் உள்ள அஸ்ஸோம்ஷான் தீவிலும் , மொரீஷியஸில் உள்ள அகா லேகாவிலும் ராணுவ வசதிகளை மேம்படுத்துவதற்கான ஒப்பந்தம் டெல்லியால் தீர்மானிக்கப்பட்டது. இரு நாடுகளின்  இறையாண்மை மற்றும் உள்நாட்டு அரசியல் விவகாரங்கள்  ஒப்பந்தங்களை நடைமுறைப்படுத்த தாமதமாக்கின.

                இது டெல்லிக்கு ஆச்ரயம் தரத்தக்கதாக இல்லை. சீஷெல்ஸ் உடனான ஒப்பந்த தாமதத்திற்கு கேள்வி எழுப்பும் இந்தியாவில் உள்ள சிலர், மிக எளிமையான தளவாடங்கள் ஆதரவு உடன்படிக்கைக்கு வாஷிங்டனுடன் பேச்சுவார்த்தை நடத்த ஒரு தசாப்தத்திற்கும் மேலாக டெல்லி எடுத்து கொண்டதை இவர்கள் நினைத்து பார்க்க வேண்டும். மற்ற நாடுகள்  ஒரு நாட்டின் மண்ணில் இராணுவ வசதிகளை செயல்படுத்துவது எந்த நாட்டிலும்  எளிதானது அல்ல.இது பெரும்பாலும் போட்டியிடும் பிரிவுகளுக்கு இடையே  அரசியல் கால்பந்து போல் ஆகிறது. மேலும் உள்நாட்டு வாதங்களை நீர்த்துப்போக செய்வதற்கும், சிறப்பு அரசியல் உறவுகளை முடக்க செய்வதற்கும் போட்டியாளர்கள் தங்கள் பெரும்பான்மை பலத்தின் மூலம் பேச்சுவார்த்தை நடத்த முயற்சி செய்கின்றனர்.


                          தில்லிக்கு, சவாலானது அதன் கூட்டாளர்களின் உள்நாட்டு கவலைகளை நோக்குவதோடு , இராணுவ ஒத்துழைப்பிற்கான கட்டமைப்பை , உண்மையில் பரஸ்பரம் இருவருக்கும் பயன்மிக்கதாக உருவாக்குவதாகும். சிறிய நாடுகளுடன் எந்தவொரு உறவும் நம் விருப்பத்தின் பேரில் அனுமதிக்கப்பட முடியாது. பங்குதாரர்கள் வெற்றி பெற வேண்டுமேயொழிய  வார்த்தைகளில் மட்டும் கூறப்படமுடியாது. இந்த நாடுகளின் தலைவர்கள் மற்ற அதிகாரங்களுடன் தங்கள் விருப்பங்களை முழுமையாக அறிந்திருக்கிறார்கள். எனவே, இந்தியா இந்த அரசியல் உறவுகளை கவனமாக தக்கவைத்து  கொள்ள வேண்டும்.

                               இதை தான் குறிப்பாக ஆங்கிலேய அரசின் அரசுத்துறை அதிகாரிகள் செய்துவந்தார்கள்.இந்த சவாலானது  தேசிய அடையாளங்கள் மற்றும் இறையாண்மைக்கு ஆர்வமுள்ள பாதுகாப்பு ஆகியவற்றை ஒருங்கிணைப்பதில் 21 ஆம் நூற்றாண்டில் மிகவும் கடினமாக உள்ளது.சீனாவின் புதிய பொருளாதார  வளமானது துணைக்கண்ட பிராந்தியத்திலும் , அதன் எல்லைக்கு வெளியேயும் அதன் அரசியல் செல்வாக்கையும், ராணுவ பங்களிப்பையும் சமாளிக்கும் சவாலை உருவாக்குவது இந்தியாவிற்கு கடினமாக உள்ளது.

                இந்திய பெருங்கடல் பிராந்தியத்தில், இந்தியாவின் புவிசார் அரசியல் போட்டிகளில், அரசுத்துறை அதிகாரிகளின் பங்களிப்பை அவர்களின்  தீவிர முனைப்பின் மீது திருப்பிவிட, விடைபெறும் வெளியுறவு செயலர் ஜெய்ஷ்ங்கர் விழைகிறார். நீண்ட காலத்திற்கு அதன் தீவிரத்தை தக்க வைக்க, அவருக்கு அடுத்தபடியாக வரும் விஜய் கோகலேவுக்கு  டெல்லியில் உள்ள அரசின் வலுவான நிறுவன ஆதரவு அவசியமாகும். இந்திய பெருங்கடலில் இந்தியாவின் இயற்கை நன்மைகளை ஒருங்கிணைக்க தேவைப்படும் சவால்கள் இந்நாட்களில் மிகவும் கடினமாகி வருகிறது.

ஆங்கிலம் - சி.ராஜா மோகன் ( இந்தியன் எக்ஸ்பிரஸ்) ஜனவரி 30,2018

தமிழாக்கம் - சரவணன்