நெடுஞசாலையின் பிரம்மாண்டத்திலிருந்து
விலகி
செல்லும் சிறு சாலை ,
விசும்பு கருமையை போர்த்தியிருக்கிறது
மேகத்தின் பொதி நுனிகளில் முட்டியபடி தவழ
பசும்நீலமாய் நீண்டு விரிகிறது பொதிகை
கை நீட்டி அணைக்க காத்திருக்கும் அன்னை என,
பெருவெளியின் காற்றை கீறி செல்லும்
பேரூந்து பயணம்-
ஆனை நடையை போல்,
மலை நெருங்கி வந்து மடி ஏற அழைக்கிறது
பெருஞ்சத்தம் ஏதுமில்லா சிறு நகரின் அங்காடி வீதியில்
சிறு தூறலின் ஈர இடைவெளியில்
தடம் மாற்றி, மீண்டும் ஒரு பயணம்.
அன்னை மடி தவழும் குழந்தை என
மலையின் அடிவாரத்தில் நத்தை போல் ஊர்கிறது
வலப்புறம்
மருதமும்,
இடப்புறம் முல்லையும்,
நெருங்க நெருங்க குறிஞ்சியாய்
காண்பவை பசுமையாய்
முளைத்து வருகிறது ஊர்.
அன்று பெய்த மலை மழையில்
சுழித்து ஓடுகிறது காட்டாற்று வெள்ளம்,
கடக்கும் போது பொங்கி வருகிறது மண் மனம்.
அகண்ட இலை கொண்ட வாதாம் மரத்தடியில்
இறங்கி மழை கம்பிகளுக்குள் நடந்து செல்கிறேன்
சன்னதி தெருவில்
கரும்மலைகளின் பின்னணியில் ஒற்றை கோபுரம்.
முடிவற்ற
ஆழத்திற்குள் கருமை போர்த்தி
ஒற்றை தீபத்தின் ஒளியில்
கருவறையில் சயனித்து
புடவியில் அனைவருக்குள்ளும் நிறைந்திருக்கிறார்
தேவாதி தேவன்
மாட வீதிகளில் ஒவ்வொருநாளும்
சுற்றி எதிரொலிக்கிறது
அவனை தினமும் தொழுதேத்தும்
கரும்பிடியின் கழுத்து மணியோசை,
கூதல் நிறைக்கும் அவ்வந்தியில்
மாடவீதியின் ஓர்அகத்தில்
நெடும் பனை உத்திர கொக்கியில்
வெண்பருத்தி ஆடையில்
வெளிச்சம் மங்கிய அறையில்
ஒளியே முகமாய்
ஒருவன் உறங்குகிறான்.
நானும் , என் அண்ணனும் ,என் தந்தையும்
என் முந்திய தலைமுறைகளும் உணர்ந்த
அந்த இயற்கையின் தணுமையை
இந்த பிஞ்சு உடலெங்கும்
விரவிச்செல்வதை
தொட்டில் விரித்து
விழிவிரிய காண்கிறேன்
என் உயிரின் விதை....!
----------பாரதிசரண்
ஓர் அருமையான பயண அனுபவம் தந்தமைக்கு நன்றி
பதிலளிநீக்குநன்றி அண்ணா
பதிலளிநீக்கு