வெள்ளி, 19 ஜூன், 2020

நிலை பெறுதல்



நீல விசும்பில் நீந்தி செல்கிறது பருந்து 
அந்தரத்தில் அலைதலில் நிலை கொள்கிறது 
வாழ்வு எல்லாம் வெளியோடு மட்டும் உரசி கொண்டிருக்கிறது 
எடையற்று இருத்தலின் இயல்பை ஏற்றிருக்கிறது.
ஆகாயம் முழுதும் ஆள்கிறது 
இறை என உயரத்தில் இருந்து 
இயங்கும் உலகை தாழ்த்தி பார்க்கிறது
ஒரு நாளின் ஒரு பொழுதேனும் 
மண் மேல் கால் பதித்து பறவையாய் ஆகி விடுகிறது.

                      ---------------------------பாரதி சரண்

வியாழன், 14 மே, 2020

உய்வுற்றிருத்தல்


 
    
                                                                                           


ஓரங்களில் மரங்கள் மட்டும் ஓங்கி நிற்க்க 
நிராதவராய் கிடக்கிறது கரும் சாலை 
மைனாவின் விழிப்பும் , நாய்களின் குறைப்பும் , காகங்களின் கரையலுமாய் 
ஓவென்று காதை அறைகிறது முற்பகல் காற்று .
வண்டியிலிருந்து தவறி விழுந்த தர்பூசணி ஒன்று 
சிதையாமல் நடு ரோட்டில் உருண்டு நிற்கிறது.
கழுத்து மணி ஒலிக்க ஒயிலாக நடை வைத்து செல்கிறது 
இளங் காளை 
தூரத்தில் ஒரு பாட்டையா மினுக்கும் கருதேகத்தில் 
வெள்ளாடையில் முன்னேறிவர 
கடக்கும் ஒரு நொடியில் 
என் மகனும் அவரும் வாயோடு கட்டி வைத்த முகக்கவசம் அவிழ்க்காமல் 
தாடை இழுபட ஒரு புன்னகை பரிமாறி கொள்கிறார்கள்.
நிர்வாணம் மறைக்க இலையாடை கண்டடைந்த அந்த தொல் மனிதனை 
நினை கொள்கிறேன்.
                                                                                  
                                                                                     --------------------பாரதிசரண் 

வியாழன், 28 பிப்ரவரி, 2019

சந்தித்துக்கொள்ளுதல்

2 ஆம் நடைமேடை
வந்துசேரும் மின்தொடர்வண்டியில் இருந்து தான் நேற்று இறங்கினேன்.
இன்று எற போகும் அதே வண்டியில்
நேற்று என்னுடன் இறங்கிய முகத்தை
தேடுகிறேன்.
எத்தனையோ முகங்கள் கடந்து போகும்
ரயில் பயணத்தில்
அறிமுகம் இல்லாத ஒருவரை
மீண்டும் சந்திப்பது போல தான்
வாழ்க்கை .
தற்செயலாக ஒரு புன்னகை உதிர்க்க
மொத்த வாழ்வின் ஓட்டத்தில்
சிற்சில கணங்களை கொண்டிருக்கிறது.


சனி, 1 டிசம்பர், 2018

மந்திரம் கவிதைகள்

21ஆம் நூற்றாண்டின் சந்தர்ப்பவாதி
நான் ஒரு நாடோடி
என்னிடம் ஒரு மடிக்கணினி உண்டு.
இரண்டு தொடுதிரை கைபேசிகள்
ஒன்று அலுவலுக்கு.
மற்றது அந்தரங்கத்திற்கு.
8மணி நேரம் தண்டுவடம் மடித்து
பணம் பண்ணுகிறேன்
மீதி நேரங்களில் பயணம், உறக்கம், கலவி
ஆம் திருமணமாணவன் -கரணம்
நான் ஒரு 90களின் சிறுவன்.
ஒரு கையால் பம்பரம் விட்டுக்கொண்டே
இன்னொரு கையால் தற்படம் எடுத்து
நிலை தெரிவிக்கும் விநோதன்.
வாய்ப்புகளை நோக்கி ஓடும் பகடையாளன்
எப்போதும் விருத்தங்கள் வேண்டி
வாழ்வை உருட்டி கொண்டிருப்பவன்.
எங்கும் வேர் விடாமல் பார்த்துக்கொள்ளும்
ஒரு மணிபிளாண்ட் மனிதன்.
எனது இளமை நினைவுக்குள் ஒரு ஊர் சுமப்பவன்
என் மகனின் நினைவுகளோ
ஒரு அடுக்ககத்தின் பல நகரங்களை ஏற்றிருக்கும்.
சந்தர்ப்பவாதத்தின் தத்துவம் கொண்ட என் வாழ்வில்
என் அப்பா ஒரு வாகை மரத்தின் செம்பூக்களோடும்,
நான் ஒரு வேப்ப மரத்தின் மஞ்சள் பூக்களோடும்,
என் பிள்ளையோ வண்ணம் குழைந்த குரோட்டன்ஸ் இலையோடும்
பால்யத்தை பகிர்ந்து கொண்டிருப்போம்.
oOo
கீழ்மையின் ஒளி
அகாலமாய் நீள்கிறது நாட்கள்.
நான்கு சுவர் ஒரு கூரை
கைபேசி திரைஒளியில் ஒளிர்கிறது இருளறை.
பெருவிரலின் அசைவுகளில்
தொடுதிரையில்
நுற்றுக்கணக்கானவர்களின் காலம்
உயிர் பெறுகிறது.
காலக்கோடு ஒரு தற்பெருமை அட்டவணை.
முகப்புத்தகத்தின்
இடுகைகளில்
மின்னும் விருப்பக்குறிகளில்
பொறாமையின்
இயலாமையின்
நுண்ணிய ரேகை பதிந்திருக்கிறது
கீச்சுகளின் கருத்துலகில்
உரையாடும் மறுமொழிகளில்
வக்கிரத்தின்
விரசத்தின்
ஆழ்மன முகமூடி
கள்ள புன்னகை பொதிந்திருக்கிறது.
தேடுபொறியின்
வலை வரலாற்றில்
அந்தரங்கங்களின் ரகசியங்கள்
வால் தீண்டும் நாகமென
தீரா காமத்தின் பின்னிரவுகளை
முடிவற்று சூழ்ந்திருக்கிறது.
அணையா இருண்மையின்
கீழ்உணர்ச்சிகள்
கரும் இரவின் போர்வையாக
எல்லா அறைகளிலும்
திரையிட்டிருக்கிறது.
ஆதி மிருகத்தின் உயிர்விசையை
அத்திரையொளி
தனித்த சுடர் போல்
நகரின் எல்லா மனிதருக்குள்ளும்
ஒளிர செய்து கொண்டிருக்கிறது
                                                              ---------------------மந்திரம்

செவ்வாய், 23 அக்டோபர், 2018

பேய் உலகம்

இருட்டு அறைகளில்
கவிந்து கிடக்கிறது அச்சம்.
அநாதரவான தனிமையில்
உயிர்பெறுகிறது
அமானுஷ்யம்.
சிறு ஒலிதுணுக்கில்
பேரமைதி அதிர்கிறது.
நினைவின் அடுக்கில்
பேய்கதைகள்
மேலுழுகிறது.
உள்ளறைகளில்
என்னை தவிர
இன்னொன்று நிறைகிறது.
இப்போது திரும்பி
பார்க்க முடிவதில்லை.
பின்புறம் குளிர்ச்சி பரவுகிறது.
தோள்களில் வியர்வை
துளிர்க்கிறது.
சட்டென வெளிச்சம் மீள்கிறது.
இனி இருளுக்கென ஒரு
உலகம் இவ்வீட்டில்
பிறந்துவிட்டது.

                 --------------------------------பாரதிசரண் 

வெள்ளி, 12 அக்டோபர், 2018

ஆடியுலகு









ஒரு பூதக்கண்ணாடி கிடைக்கும்
பொழுது
சுருங்கிவிடுகிறது உலகம்.
நுண்ணியவைகளை
கூர்ந்து நோக்கி
ஆடியின் வழி
உருப்பெருக்கு அடைகிறது
அளவுகளின் புறஉலகு.
ஈயின் இறகுகளில்
காக  உடல்நிறைகிறது.
தாத்தா செடியின் கொண்டையில்
சூரியகாந்தி இதழ் விரிகிறது
கச்சிதமான கற்பனைகள்
மாயத்தோற்றத்தில்
பருப்பெறுகிறது.
மாயஉருவங்களாய் நாமும்
யாரோ ஒருவரின்
பூதக்கண்ணாடியின் பின்புறத்தில்.

                                 
                                                         -------------பாரதிசரண் 

புதன், 10 அக்டோபர், 2018

#96 - #காதலின் #உரையாடல்

              தாழ்ப்பாளிட்ட கதவும், சாவியுமாய் இருவரின் உறவை எவ்வித அலங்காரமும் இல்லாமல் திரை மொழிக்கு கடத்தியிருக்கிறார்கள்.ஒரு அரசுப்பள்ளியின் காதலை தங்கர்பச்சானும், சேரனும் காட்சிப்படுத்திய போதும்,தனியார்பள்ளியின் உயர்த்தனமான காதலை கவுதம் மேனன் காட்சிப்படுத்திய போதும். அரசுஉதவிபெறும் பள்ளிகளை யார் கையில் எடுப்பார்கள் என்று காத்திருந்ததற்கு, காலை பள்ளியின் சூரிய வெளிச்சம் போல் மரங்களின் வழி கவிதையாய் ஒளிர்கிறது இப்படம்.
                      வாழ்வில் கள்ளம் கபடம் ஏறாத பால்யம் போல் தூய்மையான அன்பு எங்குமே இல்லை. அதனுள் கூட்டுப்புழுவிலிருந்து சிறகு முளைக்கும் வண்ணத்து பூச்சி போல் ஒரு காதல் முளைக்கிறது. இவ்வளவு நெருக்கமாய் ஒரு அன்பு நமக்கும் வாய்த்திருக்கதா என்றும், வாய்த்திருந்தவர்கள் மீண்டும் அந்த அன்பை நோக்கி ஏங்கும் முகமாய் திரையரங்கம் முழுதும் நினைவுகளின் அமைதி வழிந்து கொண்டிருந்தது.
                       ஒரு பயண புகைப்படக்காரனின் நாட்களை, இந்தியாவின் நிலவெளிகளில் அலைந்து காலங்களும் , நிலங்களுமாய் விரியும் பாடலில் இருந்து துவங்குகிறது திரைப்படம். ராமின் இயல்பையும், படத்தின் தன்மையையும் விவரித்து செல்வது போல் ,நீருக்குள் செல்லும் கல்லாகவும், நிலத்தில் தரையிறங்கும் இறகாகவும் குறிப்புணர்த்தி நம்மை சற்று உடல் தளர்த்தி அமர செய்கிறது இப்பாடல்.
                  10ம் வகுப்பு படிக்கும் போது ஒரு காதல், 22 வருட பிரிவுக்கு பின் நண்பர்கள் கூடுகையில் இருவரும் மீண்டும் சந்தித்து கொள்கிறார்கள். காலம் ஒரு புகைப்படத்தருணம் போல் அந்த நாட்களுக்கு சென்று அங்கிருந்து அவர்களின் உரையாடல் வழி அந்த 22 வருடங்களிலும் அவர்கள் காதல் எப்படி பயணித்து வந்தது என்பதை.உரையாடல்கள் மூலம் ரசிகனுக்கு கடத்தியிருக்கிறார்கள். நீங்கள் வாழ்வென நேசித்த ஒருவரை, இத்தனை வருட பிரிவிற்கு பிறகு சந்தித்தால் என்ன நிகழுமோ அதை இசையாகவும்,காட்சிகளாகவும், வசனங்களாகவும்
தனித்த இரவின் நீண்ட நடையை போல் மென்மையாக கடத்துகிறார்கள்.
            இரைச்சல்கள் இல்லா ஒரு படம் தரும் அனுபவம் என்பது, ஒரு நாவலின் ஆழ்ந்த மௌன வாசிப்பை போல் நிறைவாய், பக்கங்களை முடித்து வைத்து எழுத்து செல்வதை போல் எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல் முடிந்துவிடும்.அந்த கலை அனுபவத்தை மொத்த படக்குழுவும் அர்ப்பணிப்போடு வழங்கியிருக்கிறார்கள்.
          இந்த வரிகள் ஒரு முன்குறிப்பை போல உங்களை இந்த திரைப்படத்திற்கு அழைத்து செல்லட்டும்.
#காதலே காதலே தனிப்பெருந்துணையே..
#கூடவா ..கூடவா.. போதும் ..போதும் .
                                                                                           
                                                                                                    ---------------------பாரதிசரண்