ஞாயிறு, 4 செப்டம்பர், 2016

ஆசிரியர்கள்

நான் ஆறாம் வகுப்பு படிக்கும் போது , பெற்றோர் ஆசிரியர் தின கூட்டத்தில் ஒரு மாணவனின் பெற்றோர் எழுந்து " என்ன சார் உங்க ஸ்கூல் ல எப்ப பாத்தாலும் ஸ்போர்ட்ஸ்,கல்ச்சுரல் ன்னு நேரத்த எடுத்துக்குறீங்க பின்ன எப்ப பாடம் நடத்துவாங்க " கொஞ்சம் உரத்த குரலில் தான் கேட்டார். அதற்கு எங்கள் பள்ளியின் தலைமையாசிரியர் இந்த பள்ளி மாணவனோட எல்லா திறமைகளுக்கும் வாய்ப்பு அளிக்கிற பள்ளி , அதனால எல்லா திறன்களும் வளர்த்து எடுக்குற இடமா தான் இது இருக்கும். பாடம் மட்டும் நடத்துற எத்தனையோ பள்ளிகள் இருக்கு , உங்களுக்கு பிடிக்கலேனா அங்க கொண்டு பொய் சேத்துக்கோங்க" மிகவும் அமைதியான குரலில் அவர் சொன்னார்.

      இன்று இந்த அடிப்படை அறிவு கூட இல்லாத ஆட்களால் தான் கல்வி ஒரு பெரு வியாபாரம் ஆகி , தேர்வுகளின் வெற்றி பின்னால் மாணவர்களை ஓட செய்கிறது. ஒரு மாணவன் தன் வாழ்வின் தொடக்க காலத்தின் பெரும் பகுதியை சராசரியாக முதல் 22 வருடங்களின் அதிக நாட்களை கல்வி நிலையங்களில் தான் செலவிடுகிறான். ஒரு மாணவனை மனிதனாக வளர்த்தெடுப்பதில் பெற்றோர் , சமூகம் , நண்பர்கள் இவர்களுக்கு முன்னோடியாக விளங்குவது பள்ளிகள் மற்றும் ஆசிரியர்கள் மட்டுமே. அவன் ஆசிரியரின் வாயிலாக தான் சமூக வாழ்வியலுக்குள் நுழைகிறான் . 50 மாணவர்களோடு ஒரு நாளின் 8 முதல் 9 மணி நேரத்தை செலவிடுகிறான், அவர்களுக்கு இடையான புரிதல்களையும் தொடர்புகளையும் ஆசிரியர் மட்டுமே கற்று தர முடியும். இது தான் அவனை சமூகத்தோடு இயைந்து இயங்க வழி செய்யும் , மனிதர்களை எளிதாய் அணுக கற்று தரும் . ஆனால் இன்று பள்ளி , கல்லூரிகள் மாணவர்களை ஒருவருக்கொருவர் பேச அனுமதியாமல் மௌனித்திருக்க பயிற்றுவிக்கன்றன , அது ஒரு கொடும் சட்டம் போல் பின்பற்றப்படுகின்றன மீறினால் பெரும் தண்டனைகள் வழங்கப்படுகின்றன. இன்றைய இந்திய பள்ளிகள் சிறை சாலைகளுக்கு மேலானவையாக தங்களை மாற்றி கொண்டுள்ளன. கல்வி என்பது பாடத்திட்டங்களும் , தேர்வுகளும் என சுருங்கி போய்விட்டன. ஆசிரியர்கள் மிக சிறந்த பணியாளர்களை உற்பத்தி செய்து கொண்டிருக்கின்றனர். கல்வி நிர்வாகங்கள் மனித ஆற்றலை பெரு நிறுவனங்களின் தேவைகளுக்கு ஏற்றார் போல்  தயார் செய்து மாணவர்களை நல்ல விலைக்கு விற்று கொண்டிருக்கின்றனர்.

                            இந்தியா 30 கோடி மாணவ சமுதாயத்தை கொண்டது . இது கிட்டத்தட்ட அமெரிக்காவின் மக்கள்  தொகைக்கு இணையானது. இவர்கள் அடிப்படை கல்வி , உயர்நிலை கல்வி , மேனிலை கல்வி , கல்லூரி கல்வி சார்ந்தவர்கள்.   இந்திய மாணவர்கள் சர்வதேச மாணவர்களோடு ஒப்பிடும் போது  திறன் போட்டிகளில் மிகவும் பின்தங்கி  உள்ளனர். அவர்கள் சுயமாய் சிந்திக்க எந்த வாய்ப்பையும் இந்த கல்வி முறை அளிக்கவில்லை. இந்திய மாணவர்கள் 23 லட்சம் பேர் தொழிநுட்ப துறைகளில் நேரடியாகவும் மறைமுகமாகவும் பனி புரிகின்றனர் ஆனால் அவர்களில் 75 சதவீத பேர் திறன் குறைபாடுடன் இருக்கின்றனர்.இவர்கள் அனைவரும் தேர்வுகளில் வெற்றி   பெறுவதை மட்டுமே முழு மூச்சாக கொண்டு பயிற்றுவிக்கப்படுகிறார்கள். இந்த மாபெரும் மாணவ சமுதாயம் அதன் வளர்ச்சிக்கான எந்த மாற்று வழிமுறைக்கும் உட்படுத்தபடாமல் இருப்பதே அதன் தோல்வி.பாடங்களை  மனப்பாடம் செய்து அதை விடைத்தாள்களில் சரியாக எழுதிவிட்டால் , அது கற்றல் ஆகிவிடுமா ?.  கற்றல் அனுபவித்து அறிவது. மொழி என்பது ஒரு படகு அதன் மீதமர்ந்து பயணம் செய்ய வேண்டும் அது மற்றவற்றை கற்க உதவும் எளிய கருவி. ஆனால் அதை முழுமையா கற்றுணர வேண்டும். அடிப்படை மொழி அறிவு என்பது , அம்மொழியின் இலக்கண , இலக்கிய அறிதலுடன்  இணைந்த  அறிவாக இருக்க வேண்டும். கணிதம் , அறிவியல் இரண்டும் ஆராய்ச்சிக்கு உட்படுத்தி செய்முறைகள் மூலம் கற்று , விடைகளை பகுத்து உணர்ந்து தீர்வு காண  வேண்டும் . வரலாறு  நம் கடந்த காலத்தை உணர செய்யவும், அதன் அனுபவங்கள் மூலம் நம்மை பற்றி அறிந்து கொள்ளவும் உதவ வேண்டும். இதை தவிர மாணவர்களின் திறமைகளுக்கு வாய்ப்பு ஏற்படுத்தி தர கல்வி நிலையங்கள் முன் வர வேண்டும் . அதையும் பாடத்திட்டத்தில் ஒன்றாக கொண்டு வர அரசுகளுக்கு பரிந்துரைக்க வேண்டும். விளையாட்டு சார்ந்த திறன்களுக்கும் வாய்ப்பு அளித்து நம் மாணவர்களின்  திறமைகளை அடிப்படையில் இருந்து முன்னேற்ற வேண்டும். மாணவ சமுதாயம் என்பது இந்த தேசத்தின் நம்பிக்கை அவர்கள் இந்நாட்டின் வளர்ச்சிக்கான விதைகள், அவர்கள் மேல் கல்வியை ரசாயன உரம் என இட்டு அவர்களை மலட்டு மனிதர்கள் ஆக்கி விடாதீர்கள். அவர்களை உழுது பண்படுத்தி, கல்வியை இயற்க்கை உரமென அளித்து  அவர்கள் திறன்களை வளர்த்தெடுத்து மானுட சமுதாயத்தின் சிறந்த மனிதர்களாக நாட்டின் எதிர்காலமாய் உருவாக்குங்கள்.

     இந்த மாற்றத்திர்கான பெரும் பொறுப்பு ஆசிரியர்களான உங்களிடத்தில் தான் உள்ளது. உங்கள் மகனும்/ மகளும் ஒரு மாணவர் என நினைத்து, இந்த தேசத்தின் வளர்ச்சிக்கு வழிகாட்டியாய் மாறுங்கள்.

இனிய ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.

                                          -------------------பாரதிசரண் 

வெள்ளி, 2 செப்டம்பர், 2016

ஆச்சி

மரணம்
வாழ்வின் எல்லா நினைவுகளோடு இறுதியாகிறது



பேதைஎன நீ சுற்றித்திரிந்த காயல்பட்டின வீதிகளை
ஒரு முறை சென்று பார்க்க வேண்டும்..
நெகிழ்ந்த தோலோடு இறகென  உன்னை கண்டதற்க்காக  


எங்கள் தாத்தாவை நீ கரம் பற்றிய காட்சிகளை
கேட்டு உணர வேண்டும்...
இரு கட்டிலை அருகருகே படுத்து பென்னலூரில்
நீங்கள் வாழ்ந்த மூப்பின் நாட்களை அர்த்தப்படுத்த

ஐந்து மகளும் ஓர் மகனுமென .
நீயம் தாத்தாவும் வாழ்ந்த
ஆத்தூர் வீட்டின்
அறைகளுக்குள் சென்று நிற்க வேண்டும்
இந்த பெரிய குடும்பத்தின் மரமொன்று
கிளைகள் விரித்து பரந்து நிற்பதன்
வேரின் ஆழம் அறிய..

நீ இறுதியாய் சுவாசம் நிறுத்திய
இடம் வந்து வணங்க வேண்டும்..
ஒரு பெரு வாழ்வின் அத்தனை
அனுபவங்களுக்கும் சாட்சியாய்
தெய்வமாய் எங்களோடு
எல்லாமுமாய் என்றும் நீ இருக்க
" ஆழ்வார் ஆச்சி "


                               -----------பாரதிசரன்