நேற்றைய தருண் விஜய் அவர்களின் கருத்திற்கு இணைய உலகம் கடுமையான எதிர்ப்பை தெரிவித்ததோடு மட்டுமல்லாமல், காசு வெட்டி போட்டு தேசத்தை இரண்டாக பிரித்து விடலாம் என்று வரை கொதித்து உள்ளார்கள்.
நிற வெறி என்பது என்ன என்ற அடிப்படை புரிதல் இல்லாத மக்கள் ஆக நாம் இருக்கிறோம். ஒரு தேசத்தில் வெள்ளை, கருப்பு நிறம் கொண்ட மக்கள் , அழகின் அடையாளமாய் வெள்ளையை முன்னிறுத்தி கருப்பு நிற மக்களை ஒதுக்கி வைப்பது தான் நிற வெறி. அமெரிக்கா , தென்னாபிரிக்கா போன்ற நாடுகளில் இதை தான் செய்கிறது. நிறத்தின் பேரால் ஒதுக்கீடு தரப்படுவது வரை அதன் வீச்சு செல்கிறது. .
ஆனால் திரவிட இனத்தின் உண்மையான நிறமே கருப்பு என்று வசனம் பேசும் நாம். நம்மை நோக்கி யாராவது நீங்கள் கருப்பு என்று சொல்லிவிட்டால், ஒருவித அவமானம் கொண்டு அவர்களை நோக்கி கூச்சலிட துவங்குகிறோம். இதற்க்கு காரணம் இன்னும் நம் ஆழ்மனதில் கருப்பின் மேல் நீடிக்கும் வெறுப்பு, அதை துக்கத்தின் நிறமாக , அமங்களத்தின் நிறமாக வைத்திருப்பதே. வெள்ளை நிறத்தின் மேல் தனியா மோகம் எல்லோர் மனதிலும் இருக்கிறது. அதனால் தான் இன்னும் நம் சமூகத்தில் கருப்பு நிற பெண்களை முதிர்கன்னிகளாக ஆக்கி கொண்டு இருக்கிறோம்.
"நாங்கள் நிறவெறியர்கள் ஆக இருந்திருந்தால் தென் இந்தியாவின் கருப்பு வண்ண மக்களோடு எப்படி வாழ்ந்து கொண்டிருப்போம்" இது தான் அவர் சொன்ன வரிகள். இதில் எது நம்மை அவமானப்படுத்தி விட்டது என்று தெரியவில்லை, நாம் கருப்பு நிறம் கொண்டவர்கள் தான் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை, அந்த வண்ணத்தை முன்னிறுத்தி யாரும் என்னை சிறுமை செய்து விடமுடியாது காரணம் நிறம் என்னை எந்த ஒரு தரவரிசைக்குள்ளும் நிலைநிறுத்த செய்யவில்லை. வெள்ளை போன்றே கருப்பும் ஒரு வண்ணம் தான்.
நிற வெறி இல்லாத மக்கள் நாங்கள் என சொல்வதற்க்காகவே அவர் அந்த வார்த்தைகளை பயன்படுத்தியிருப்பர் என்று என்னால் ஏற்று கொள்ள முடிகிறது. காரணம் 3 வருடங்களுக்கு மேல் வட இந்தியாவில் இருக்கும் எனக்கு , இவர்கள் நிறம் வழியே ஒரு ஏற்றத்தாழ்வை முன்னிறுத்த மாட்டார்கள் என அனுபவரீதியாக நான் உணர்ந்தவன்.
மேலும் இந்தியாவில் ஏற்றத்தாழ்வு பார்க்க சாதி, மத, இன , மொழி என்று இத்தனை வேறுபாடுகள் இருக்கும்போது புதிதாக நிறம் வேறு வேண்டுமா என்று எல்லோரும் நினைத்ததனால் அதன் மேல் பெரிய ஈர்ப்பு இல்லாமல் போய்விட்டது என நினைக்கிறேன்.
------------------சரவணன்