புதன், 10 ஆகஸ்ட், 2016

என்னோடு நீ

வாழ்க்கை முடிவிலிருந்து விரிகிறது
உறக்கத்திலிருந்து கனவு போல...

இப்பயணம்  காட்டின் பாதை போல்
திடீரென திரும்பி எங்கோ கூட்டி செல்கிறது...

மேகம் மூடும் மலை சரிவாய்
கணப்பொழுதில் மூடி திறக்கிறது...

நுனி புல்லினின் பனியில்  விழுந்து கிடக்கும்
காட்டின் பேருலகை  காட்டி தருகிறது....

முயங்குதலின் இனிமையை பறவைகளின் குரல் வழியே
காட்டின் மரங்களுக்குள் எதிரொலிக்கிறது...

இரவின் ஒளி வழியும் அடர் இருளின் அழகியலை
காடெங்கும் நிறைத்து காமுறுகிறது..

சலனமேதும் இன்றி வெளிச்சத்தின் ஒளிச்செறிவோடு
அமைதியின் உலகமாய் விடிகிறது ..

உன்னோடு என் வாழ்வும் காடும் காட்டின் நிமித்தமுமாய் சலசலக்கிறது

                                                                                       -------------------பாரதிசரண்