வெள்ளி, 29 ஜூலை, 2016

I MISS YOU....

 i miss you ....

உலகெங்கிலும் வெவ்வேறு மொழிகளில் எங்கோ ஓரிடத்தில் யாரோ ஒரு பெண்ணோ ஆணோ பிறரிடம் சொல்லும் அழகான வார்த்தை i love you. எப்போதும் உணர்வுகள் தாய் மொழியில்  பகிரப்படும்போது  அதன் செறிவு  கூடி உள்ளார்ந்து சென்றடைகின்றன."காதலிக்கிறேன் " என்னும் சொல்லும் போது அவ்வார்த்தை நீட்டும் மகிழ்ச்சி அனுபவித்து திளைப்பது. "காதல்"   தமிழ் தந்த ஒரு மாய சொல்.அதை நினைத்தாலே ஒரு கனவு அழகாய் விரிந்து நம்மை ஒரு வாழ்வுக்குள்  நிறுத்திவிடுகிறது. அச்சொல் நமக்கே நமக்காய் பிறரால் சொல்லப்படும்போது நம்மை அறியாமல் நம்மை அவர்களிடத்தில் ஒப்புவிக்கிறோம். ஒரு சொல் அத்தகைய  கொடையை , கருணையை நமக்குள் ஊற்றெடுக்க வைக்கிறது . மொழிக்கு நிச்சயம் அத்தனை வலிமை உண்டு. அதுவும் தமிழ் ஈராயிரம் ஆண்டின் பண்பாட்டை வாழ்வியலை சுமந்து கொண்டிருக்கிறது. எல்லா சங்க இலக்கியங்களும் ,நவீன இலக்கியங்களும் காதலை பாடு பொருளாக்கி கதையாய் கவிதையாய் காவியமாய் படைத்ததுக்கொன்டே இருக்கின்றன . "காதலிக்கிறேன் " என்ற வார்த்தை i love you என்ற வார்தைக்கான சரியான தமிழ்ப்பதம். காதலை  மணலாக்கி கைகளுக்குள் வைத்து கொண்டது போல அத்தனை நிறைவு. விரலிடுக்கின் வழியே வழிந்து மறையும் மணல் போல் காதலின் வெறுமை கைகளுக்குள் எதையும் நிறைப்பதில்லை. அதை ஆங்கிலம் i miss you என்று தொலைத்து விடுகிறது. காதல் அப்படி எளிதாக தொலைத்து விட கூடியதா ?. இல்லை காணாமல் ஆக்கி விடுகிறார்கள் காதல் அவ்வாறு எளிது கண்களில் இருந்து மறைந்து போக கூடியதா ?

காதலின் உறவுக்குள் தலைவனும் தலைவியும் தனிதித்திருப்பதை குறுந்தொகை ஐ வகை நிலத்தின் மனிதர்களுக்கும் ஏற்றார் போல் பல பாடல்களில் உரைக்கிறது. பிரிவின் சோகம், ஏக்கம், தனிமை என  பாடி தீர்க்கிறது. இத்தனை பழமையான இலக்கியம் பேசிய பிரிவை தமிழ் மொழியில் உணர்வாய் தெரிவிக்க ஒரு அழகான சொல் இல்லை என்பது பெரும் வலி. i miss you என்ற வார்த்தைக்குள் என்னை பொருத்தி கொள்ள முடியவில்லை அது வெறும் சொல்லாக மட்டுமே என்னுள் எஞ்சுகிறது. என் தவிப்பின் உணர்ச்சியை என் மொழி மீது ஏற்றி சொன்னாலொழிய அதன் உண்மை என் தலைவியிடம் சென்றடையாது. அப்படி ஒரு நாள் தனித்திருக்கும் போது ஒரு வார இதழில் வேறு மொழி சொற்களை   தமிழ்ப்படுத்துதல் பற்றிய கட்டுரையில் i miss you என்பதற்கான தமிழாக்கமாய் "பிரிவுழல்கிறேன்" என்ற வார்த்தை இடப்பட்டிருந்தது. ஒரு நிமிடம் அமைதியாய் எனக்குள் அதை சொல்லி பார்த்தேன். தலைவனும் தலைவியும் பிரிந்து இருக்கும் போது இருவரும் ஒருவரை ஒருவர் காணாமல் தனிமையில் உழல்வதை எவ்வளவு அழகாய் ஆழமாய் தமிழ்ப்படுத்தியிருக்கிறார்கள்.   "உழல்தல் " இச்சொல் காதலின் தவிப்பை , ஏக்கத்தை , தனிமையை , காத்திருப்பை பிரிவின் பால் வருந்தும் ஒரு தலைவனுக்கும் தலைவிக்கும் பொருத்தி பார்க்கும் போது அவர்கள்  கொண்ட சோகம் மொழியின் மீது உணர்வாய் படர்ந்து ஒரு காற்று போல் பிறரை சென்றடைகிறது .

"பிரிவுழல்கிறேன்" என்ற சொல் ,

பேருந்து பயணத்தில் கேட்ட  ஒரு அழகான பாடலின் சங்கீதமாய் செவிக்குள் ஒலித்து கொண்டிருக்கிறது ..
பள்ளி நாட்களில் வாங்கி சுவைத்த ஆரஞ்சு மிட்டாய்யாய் நாக்கினுள் இனிக்கிறது..
பூக்கடையில் நின்று வாங்கிய மல்லிகையின் மணமாய் நாசிகளில் நிறைக்கிறது..
அந்தி சரியும் மலை தேசத்தின் காட்சியாய் கண்களில் உறைகிறது ...
பால் மனம் மாறா சிசுவின் விரல் தீண்டலாய் உடலெங்கும் சிலிர்க்கிறது...

"பிரிவுழல்கிறேன் கண்மணி ".......

                                                                 ------பாரதி சரண்